ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் மரணம் அடைந்த ஒரு யூதரின் உடல், அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. நபிகள் நாயகம் எழுந்து சென்று மரியாதை செய்தபோது, தோழர்கள் நபிகளாரை நோக்கி, “அவர் யூதராயிற்றே, நீங்கள் ஏன் அவருக்காக மரியாதை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம், “அவர் மனிதராயிற்றே” என்று விடை அளித்தார்.
யூத மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் நபிகள் நாயகம் அவற்றைப் பொருட்படுத்தாது, இறந்து விட்ட ஒரு யூதருக்கு மரியாதை செய்தார். மனித உறவுகளுக்கும், மனித நேயத்திற்கும், மதங்களும், கொள்கைகளும் ஒரு தடையாக இருக்க வேண்டாம் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கொள்கை வேறு, மனித நேயம் வேறு என்ற நபிகளாரின் அணுகுமுறை மனித சமூகத்திற்குச் சிறந்த படிப்பினை ஆகும்.