Tuesday, July 22, 2014

எளிமையாக படிக்க சில டிப்ஸ்

மாணவர்கள் ஒரு பாடத்தை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான வழிமுறைகளை பின்பற்றுவதால் பாடத்தை எளிதாக புரிந்து படிக்க முடியும். படிக்க போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கு துணை தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும். பாட சுருக்கத்தை நன்றாக படிக்க வேண்டும். இதில் உள்ள சில வார்த்தைகளை படிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும்.

பாடசுருக்கத்தை வாசித்த பிறகு பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்வியாக மாற்றி நமக்குள் கேட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதை தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எதற்காக இதை படிக்கிறோம், அதன் பயன் என்ன, என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். 

அர்த்தம் புரியும்படி வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றோடு தொடர்பு படுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால் திருப்பி பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாக பாடத்தை நினைவிற்கு கொண்டுவர முடியும்.

வாசித்து முடித்தபிறகு முக்கியமானவற்றை நினைவுக்கு கொண்டு வந்து சொல்லி பார்க்க வேண்டும். இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்தி கொள்ள மிக சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாக சொல்லி பார்க்க வேண்டும். இம்முறையை கொண்டு ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்கு செல்ல வேண்டும். பின்னர், பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரி தேர்வு எழுதி பார்க்க வேண்டும். ஒரு முறை முதலில் இருந்து அனைத்தையும் திரும்ப பார்க்க வேண்டும். 

ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாட சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும். ஒரு விஷயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்து கொள்வதை விட சில குறிப்புகளால் மனதில் வைத்து கொண்டால் அவை எளிதில் மறக்காது. 

எந்த விஷயத்திலும் கவனம் சிதறாமல் இருக்க தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் புத்துணர்ச்சியுடன் செயல்படமுடியும். உணவு பொருட்களில் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்வதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

No comments:

Post a Comment