Friday, August 29, 2014

இலந்தை

இலந்தை (ZIZIPHUS JUJUBA) !
நம்மில் பலபேர் அருவெறுப்புடன் நோக்கும் ஒரு அரிய பழம் இது. வட்டவட்டமான இலைகளையும், முட்களையும் கொண்டிருக்கும் இதன் மரம் அதிகளவாய்ப் பன்னிரண்டு அடி உயரம் மட்டுமே இருக்கும். இக்கனியில் காட்டு இலந்தை, சீமை இலந்தை என இரண்டு வகையுண்டு. மருந்து என்று வருகின்றபொழுது, நாம் இந்தக் காட்டு இலந்தை, அதாவது சின்ன இலந்தையைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அப்படிச் சின்ன இலந்தை கிடைக்காத நிலையில் நாம் சீமை இலந்தை எனப்படும் பேரிலந்தையைப் பயன்படுத்தலாம்.
இது உண்ணக்கூடியது மட்டுமல்லாமல் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருப்பது. இதில் இல்லாத சத்தே இல்ல எனலாம். அமினோ அசிட் (amino acid), புரதச் சத்து (Proteins), விட்டமின்கள் (Vitamins), தாது உப்புக்கள் (Minerals), சுண்ணாம்புச் சத்து (Calcium), இரும்புச் சத்து (Iron) போன்றவை அடங்கியது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் இதை உண்ணலாம்.
இது ஒரு astringent. நம் உடலில் உள்ள எந்தவகையான சுரப்பிகளிலும் வரக்கூடிய தேவையற்ற வீக்கத்தினை வடித்து வற்றச் செய்யக்கூடிய ஆற்றலுள்ளது இக்கனி. இதன் சமூலம், (இலை, பட்டை மற்றும் வேர்) மருத்துவ குணம் பொருந்தியவை. உடல் உறுப்புகளை வலு பொருந்தியதாக ஆக்கக்கூடியது இக்கனியை மென்று தின்கையில், பல்லிற்கும், ஈற்றிற்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு இரத்தம் கசியும் ஒரு நிலையான ‘பயோரியா’வைக் குணப்படுத்தும். பற்களில் படியும் அனைத்துக் கிருமிகளையும் போக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படும். உடல் சூட்டை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. இக்கனி, பித்தத்தினை நீக்கக்கூடியது. சிறுநீரகத்தை வலுவாக்கும். பேதியை நிறுத்தும். முக்கியமாக இரத்த அழுத்தத்தினைச் சமப்படுத்தும். இரத்த அழுத்தினால் வரும் தலை வலி, மன அழுத்தம் போன்றவற்றினைச் சரிப்படுத்தும். கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். இலந்தை மரத்தின் வேரை அரைத்து, மூட்டு வலிக்கு பூச, மூட்டுவலி குணமாகும். சிறந்த நார்ப்பொருள் (Fiber) அடங்கியுள்ளதால், மலச் சிக்கலை போக்கக் கூடியது.
இதன் இலையை அரைத்துப் பசையாக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை போகும். இதன் இலையைப் பசையாய் அரைத்துப் புழுவெட்டு கண்டுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து, அரைமணிநேரம் ஊறவைத்துப் பின் குளித்துவர, புழுவெட்டு குணமாகும். இலந்தை வேரினை நன்றாகக் காயவைத்துப் பொடிசெய்து வைத்து, அதனைக் காயங்களின்மேல் தூவிவர, ஆறாத காயமும் ஆறும்.
இலந்தைப் பழக் குடிநீர் அல்லது தேநீர்: இலந்தைப் பழங்களை நசுக்கிக் கொட்டை நீக்கிப் பசைபோல் செய்து கொண்டு, அதனோடு நீரும் பனை வெல்லமும் சேர்த்துக் காய்ச்சி தேநீர்போல் அருந்தி வரலாம். மிக்க சுவையுடையது. வயிற்றுப்போக்கு ஏற்படுகையில், இக்குடிநீர் மிகுந்த பயன் தரக்கூடியது, இது இரத்தப் போக்கு, சீதபேதி போன்றவற்றை நிறுத்தும், உடலுக்கு உற்சாகத்தைத் தரும். வயிற்றுப்போக்கின் மூலம் வரக்கூடிய நீரிழப்பை (Dehydration) உடனடியாகச் சரிசெய்து உடலுக்கு உற்சாகத்தையும் வலுவையும் தரக்கூடியது. இதே குடிநீர், ஆண்களுக்கு ஒரு உரமேற்றியாகவும், இல்லற வாழ்வில் குறையற்று ஈடுபடுமளவிற்கான ஊக்கிப் பானமாகவும் (sexual tonic), நரம்பு மண்டலத்தினை வலுப்பெறச் செய்யவும் பயன்படும்.
இலந்தையிலைக் குடிநீர்: இலந்தை இலையை அப்படியே நீரில் இட்டு நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி, அதனோடு தேன் சேர்த்துப் அருந்திவர, மூளை நன்கு வலுப் பெரும். நினைவாற்றலை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தையும் மிகவும் வலுப்படுத்தும் ஒரு உற்சாகப் பானமாகப் பயன்படும். பெண்களுக்கு இருநாள் தாண்டியும் போகக்கூடிய மாதவிடாய் இரத்தப்போக்கினைக் (Menorrhagia) கட்டுப்படுத்தும்.
இப்படியான மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த இலந்தையை, வெறும் Jujube என்று எள்ளி நகையாடித் தூக்கி எறியாமல் பயன்படுத்துவீர்களேயானால், வாழ்வில் இறுதிவரை நலமோடும், ஆரோக்கியத்தோடும் வாழலாம். உங்கள் பிள்ளைகளின் பள்ளி வாயிலில் கிழவியொருத்தி ஐம்பது காசுக்கும் ஒரு ரூபாய்க்கும் இதனை விற்றுக் கொண்டிருப்பாள். இனிமேலாவது அதனை அருவெறுப்புடன் பார்த்துப் பிள்ளைகளை ‘அதனை வாங்கி உண்ணக்கூடாது’ என்று கட்டுப்படுத்தாமல், ஐஸ் க்ரீம், குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் போன்றவற்றினைத் தவிர்த்து, இதனை வாங்கி உண்ணுமாறு அறிவுறுத்துங்கள். பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும், அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாகவும், படிப்பில் வல்லவர்களாகவும், நோய் எதிர்ப்புசக்தி மிகுந்தவர்களாகவும், நீண்ட, ஆரோக்கியமான வாழ்வினைப் பெற்றவர்களாகவும் வளர்வர்.

No comments:

Post a Comment