Monday, September 15, 2014

கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்னும் வியாதி நீங்க

கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்னும் வியாதி நீங்க சித்த மருத்துவம்:-
'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.

காரணங்கள்:
சுகாதாரமற்ற சூழலில் வசித்தல், மனிதக் கழிவுகள் உணவுப் பொருட்களில் கலத்தல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கிருமித் தொற்றுள்ள பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், கழிச்சல் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
வயிற்று வலியுடன் மலம் கழித்தல், நாளன்றுக்கு 3 முதல் 8 முறை மலம் கழித்தல், மலத்துடன் சளி மற்றும் ரத்தம் கலந்து வெளிப்படுதல், சோர்வு, ஆசன வாய்ப் பகுதியில் வலி ஏற்படும். நோய் தீவிரமான நிலையில் ரத்தத்துடன் நீர் நீராக 10 முதல் 20 முறை கழிதல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
* அவரை இலைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் கிளறி கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.
* லவங்கைப் பட்டை, சுக்கு, ஏலரிசி சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
* கீழாநெல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து கொட்டைப் பாக்களவு மோரில் கலந்து உண்ணலாம்.
* கால் டம்ளர் கொள்ளு இலைச்சாறுடன், காசுக் கட்டி இரண்டு கிராம் சேர்த்து அருந்தலாம்.
* கோரைக் கிழங்கையும், இஞ்சியையும் தேன்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம்.
* அசோகப்பூவின் பொடி கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
* அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை கைப்பிடி அளவு எடுத்து, வாழைப்பூச் சாறு இரண்டு டம்ளர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்
* காட்டத்திப்பூ, வில்வ வேர், யானைத் திப்பிலி, இவற்றைப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
* அதிவியம், கடுக்காய்ப்பூ, சிறுநாகப்பூ, போஸ்தக்காய் - இவற்றை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.
* இலந்தை இலையை அரைத்து, சர்க்கரை கலந்து சுண்டைக்காய் அளவு உண்ணலாம்.
* விளாம் பிசினைப் பொடித்து, அதில் கால்ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
* வில்வப் பிஞ்சை அரைத்து, கால் ஸ்பூன் எடுத்துத் தயிரில் கலந்து உண்ணலாம்.
* மாம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் உண்ணலாம்.
* மாதுளம் பிஞ்சு, ஏலக்காய், கசகசா, குங்கிலியத்தூள் சம அளவு எடுத்து பொடித்து கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
* புளியம்பட்டைத் தூள் ஒரு பங்கு சீரகம், 3 பங்கு சேர்த்து சம அளவு பனங் கற்கண்டு சேர்த்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
* வெண்டைக் காய்ப் பிஞ்சு 100 கிராம் எடுத்து வெட்டி ஒரு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்ற வைத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
* பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
உணவு சேர்க்க வேண்டியவை:
அன்னாசிப் பழம், பப்பாளி, பீட்ரூட். கேரட், பூண்டு, தர்பூசணி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு, மோர், தயிர்
தவிர்க்க வேண்டியவை:
காபி, மது பானங்கள், மாவுப் பொருட்கள், காரமான உணவுகள், சுகாதாரமற்ற அனைத்து உணவுகள்.

No comments:

Post a Comment