Monday, November 24, 2014

பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?

அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது எவ்வாறு?
ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பின், அவர் மனம் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவராக தூய மனதுடன் அவனிடம் பாவமன்னிப்பு கோருவாராயின், அந்த முஃமின் ஷிர்க் போன்ற படுபயங்கரமான பாவங்களைச் செய்திருப்பினும் அவருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறியிருக்கிறான்.
அதுமட்டுமல்லாமல் அளவற்ற அருளாளனும் தன்னுடைய படைப்பினங்களின் மேல் கொண்டுள்ள அளவில்லாத கருணையினாலும் அந்த முஃமினுடைய பாவங்களை மன்னிப்பதோடு அல்லாமல் அவர் செய்த தீய செயல்களை நற்செயல்களாக மாற்றி விடுவிடுகிறான்.
அளவற்ற அன்புடையயோனாகிய அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவதற்கான நிபந்தனைகள்: -
1) மனத் தூய்மையுடன் பாவமன்னிப்பு கோரவேண்டும்
2) செய்துக் கொண்டிருக்கின்ற பாவமான செயல்களை உடனே நிறுத்த வேண்டும்
3) மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது
4) தாம் செய்த பாவமான செயல்களை நினைத்து கைசேதப்படவேண்டும்
5) ஒரு அடியான் மற்றொரு அடியானுக்குச் செய்த பாவங்களுக்காக முதலில் அந்த அடியானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
6) மரணத்தருவாயில் உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
7) சூரியன் மேற்கில் உதயமாவதற்கு முன்னர் பாவமன்னிப்பு கோரவேண்டும்
வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: -
39:53 'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
செய்த தவறுக்காக உடனே அல்லாஹ்வை நினைத்து, வருந்தி பாவமன்னிப்பு கோரினால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவனபதியை பரிசாக தருவான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 3, வசனங்கள் 135-136 ல் கூறுகிறான்: -
3:135 தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
3:136 அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
தவ்பா செய்து, ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்பவருடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுகிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 25, வசனங்கள் 63-71 ல் கூறுகிறான்: -
25:63 இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் 'ஸலாம்' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
25:64 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
25:65 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்' என்று கூறுவார்கள்.
25:66 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
25:67 இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
25:68 அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
25:69 கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
25:70 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
25:71 இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பாவத்தை விட்டும் திருந்திக் கொண்டால் அல்லாஹ் மன்னிக்கிறான்: -
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 6, வசனம் 54 ல் கூறுகிறான்: -
6:54 நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், 'ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)' என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
பாவ மன்னிப்பு கோருபவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
'யார் தாம் செய்த பாவத்திற்காக பாவமன்னிப்பு கோருகிறாரோ அவர் பாவமே செய்யாதவரைப் போலாவார்' (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், ஆதாரம்: திர்மிதி)
உயிர் தொண்டைக் குழியை அடைவதற்கு முன் பாவமன்னிப்பு கோரவேண்டும்: -
'அல்லாஹ் தன்னுடைய அடியானுடைய பாவமன்னிப்பை மரணத்தருவாயில் அவர் உயிர் விடும் வரைக்கும் ஏற்றுக் கொள்கிறான்' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: திர்மிதி)
பாவமன்னிப்புக் கோருவதன் அவசியம்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
"அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன்" அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்
முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களே அல்லாஹ்விடம் தினமும் நூறு முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்றால் நாம் எவ்வாறு கோரவேண்டும் என்பதைச் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:286)
மனித உணர்வுகளை நன் கறிந்த வல்ல ரஹ்மானான அல்லாஹ் தவறிழைக்கும் மனிதர்களை உடனே தண்டி க்காது, பாவ மீட்சி பெறுவ தற்கான அவகாசத்தையும் அளிக்கின்றான். மனிதர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக பாவிகளை அழைத்து “எனது அடியார் களே, நீங்கள் இரவு, பகலாக தவறிழைத்துக் கொண்டிருக் கிரீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பவ னாக இருக்கிறேன். எனவே என்னிடத்தில் பாவ மன்னிப் புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கிறேன் (ஹதீஸ் குத்ஸி) எனக் கூறுகின்றான்.மேலும், “உங்கள் இரட்சக னின் மன்னிப்பின் பக்கமும் வானம் பூமியின் அளவு அகலமான சுவர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள், (ஆல இம்ரான்: 133) என அருள்மறை அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்குமாறு தூண்டியதோடு, தினந்தோறும் 100 தடவை பாவ மன்னிப்புக் கோருபவர் களாகவும் இருந்தார்கள். இவ்வுலகிற்கு வழிகாட்டிக ளாக அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அனைவரும் தம் சமூகத்தாருக்கு இறை கட்டளைகளைப் போதித்து நேர்வழிப்படுத்தியதோடு இறைவனிடம் பாவமன்னிப் புக் கோரி திருந்தி வாழு மாறும், பாவ மீட்சியின் மூலம் அவனது அளவிலா அருளைப் பெறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
காரணம் மனிதர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து தீமையில் மூழ்கும் போது இறை அருட்கொடைகள் அனைத்தும் துண்டிக்கப் படுகின்றன. இறைவனின் கோபமும் அதிகரிக்கின்றது. பஞ்சமும், வரட்சியும் தாண்டவமாடுகின்றன. அதனால் தான் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் வரட்சி, பஞ்சம் ஏற்பட்டால் மழை வேண்டித் தொழுகை நடத்துமாறும், அனைவரும் ஒன்றிணைந்து பாவ மன்னிப்புக் கோருமாறும் கற்றுத்தந்துள்ளார்கள்.
பாவ மன்னிப்புக் கேட்ப தால் ஏற்படும் நன்மைகள்
1. தீமைகளிலிருந்து விடுபட்டு இறை அன்பைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
‘நிச்சயமாக பாவங்களை உணர்ந்து மீளுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல் பகரா : 222)
2. இறை தண்டனை தடுக்கப்படுகிறது, அவர்கள் பாவ மன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.(அல் அன்ஃபால் : 33)
3. செல்வமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைக்கிறது. மழை பொழிந்து, தோட்ட ங்கள் செழிப்படைந்து, பூமி பசுமையாகிறது. உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்ச யமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். செல்வங்களையும் ஆண் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவதோடு, உங்களுக்காக செழிப்புமிக்க தோட்டங்க ளையும் தருவான், (அவைகளின் செழிப்பிற்காக) ஆறுகளையும் உருவாக்குவான். (நூஹ் : 10, 11, 12)
4. கஷ்டங்கள், கவலைகள் நீங்கி, உணவில் விஸ்தீரம் ஏற்படுகிறது. எவர் பாவ மன்னிப்புடன் இணைந்து இருக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சகல இக்கட்டான நிலைமைகளின் போதும் அருட்கொடைகளின் வாயிலைத் திறந்து விடுகிறான். சகல கவலைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுக்கிறான். அவர் எதிர்பாராவிதத்தில் அவருக்கு உணவளிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், அஹ்மத், இப்னுமாஜா)
5. ஏற்கனவே செய்த பாவங்கள் நன்மைகளாக மாற்றப்படுகின்றன.
“எவர் தவ்பா செய்து, விசுவாசமும் கொண்டு நற்செயலும் செய்தாரோ, அத்தகையோருடைய தீமைகளை அல்லாஹ் நன்மை களாக மாற்றி விடுவான்.(அல்புர்கான் : 70)
6. இறை மன்னிப்பும், சுவர்க்கமும் கிடைக்கின்றன. மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால் அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல் லாஹ்வை நினைவு கூர்வார்கள். இன்னும் அவனிடமே தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார் கள். … அத்தகையோருடைய கூலி அவர்களுடைய இரட் சகனிடமிருந்து மன்னிப்பு மற்றும் சுவனபதிகளாகும். (ஆல இம்ரான் : 135, 136)
பாவ மீட்சிக்கான விசேட நேரங்கள்
* இரவின் பிந்திய பகுதி (ஸஹர் நேரம்) எமது இரட்சகன் ஒவ்வொரு இரவிலும் இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சியிருக்கும் வேளை இப்பூமியின் வானத்திற்கு இறங்கி வந்து என்னை யார் அழைக்கி றாரோ, அவருக்கு நான் பதிலளிக்கிறேன். எவர் என்னிடம் கேட்கிறாரோ, அவருக்கு நான் கொடுக்கிறேன். எவர் என்னிடம் பாவ மன்னிப்புக் கேட்கிறாரோ, அவருக்கு நான் பாவ மன்னிப்புக் கொடுக்கிறேன் எனக் கூறியதாக நபி (ஸல்) நவின்றார்கள். (புஹாரி)
“அவர்கள் ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்புக் கோருவார்கள் (அத்தாரியாத் : 18) என அல்குர்ஆன் முஃமின் களின் பண்புகளைக் கூறும் போது தெளிவுபடுத்துகிறது.
* ரமழான் காலம் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர் களிடம் லைலதுல் கத்ர் இரவு இது தான் என நான் அறிந்தால் எதை ஓத வேண்டும் எனக் கேட்ட போது “அல் லாஹும்ம இன்னக அஃபுவ் வுன், துஹிப்புல் அஃபுவ்வ பஃபு அன்னீ” என்று பாவ மன்னிப்புக் கேளுங்கள் எனக் கூறினார்கள்.
மேலும் எவர் ரமழானை அடைந்தும் அதன் மூலம் பாவ மன்னிப்புப் பெறவில் லையோ, அவர் நாசமாகட்டும் என ஜிப்ரீல் (அலை) பிரார்த் திக்க, நபி (ஸல்) ஆமீன் கூறியுள்ளார்கள்.
* உம்ரா, ஹஜ் கடமைக ளின் போது பின்னர், மனி தர்கள் திரும்புகின்ற (முஸ்தலிபா எனும்) இடத்திலிருந்து நீங்களும் (மினாவுக்குச்) செல்லுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். (அல் பகரா : 199)
மேலும், ஒருவருடைய ஹஜ் அங்கீகரிக்கப்பட்டால் அவர் அன்று பிறந்த பாலகன் போல் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவராகத் (தன் வீடு) திரும்புகிறார் எனறும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (புஹாரீ – முஸ்லிம்)
* தொழுகை நேரம் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் மூலம் பாவக் கறைகள் நாளாந்தம் ஐவேளையும் அகற்றப்படுகின்றன எனக் பீறியதோடு, அதில் பாவ மன்னிப்புக் கோருமாறும் கற்றுத் தந்துள்ளார்கள். தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரைக்குமான தொழுகையின் பல நிலைகளில் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அத்தஹிய்யாதின் போது கேட்கும் பாவ மன்னிப்பு துஆ மிக விசேடமானதாக இருக்கிறது.
ஒரு மனிதன் பாவங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, நல்லடியானாக வாழ்ந்து, சுவனத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் எதிர்பார்ப்பும் கட்டளையுமாகும்.
அதனால் தான் தொழுகையில் தொழுது முடிந்த பின் கூட்டம் கூடிக் கலையும் போது, வெற்றியின் போது, கழிவறையில் இருந்து வெளியேறும் போது என ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் சகல நிலைமைகளின் போதும் பாவ மன்னிப்புக் கோருமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே, பாவ மன்னிப்பின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து, எமது தவறுகளை இனங்கண்டு வல்ல ரஹ்மானிடம் மனம் வருந்தி பாவ மன்னிப்புக் கோருவோமாக

No comments:

Post a Comment