Monday, December 29, 2014

ஹதீஸ்-இறை நம்பிக்கை:

பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த ஒருவருக்குப் பணம் தேவைப்பட்டது. பலரிடம் அவர் 1000 தீனார் கடன் கேட்டுப் பார்த்தார். பலர் மறுத்துவிட, இறுதியில் அவருக்கு ஒரு மனிதர் கடன் கொடுக்க முன்வந்தார். ஆனாவ் அதற்கு சாட்சியாக ஒருவரைக் கூட்டி வரும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் கடன் கேட்ட மனிதரோ, எனக்கு சாட்சியார் யாரும் இல்லை. அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன் என்று சொன்னார்.
நீ இப்பணத்தை திருப்பித் தராவிட்டால் அதைத் திருப்பித் தரக்கூடிய பொறுப்பாளர் ஒருவரை அழைத்து வருவீராக! என்று கடன் கொடுப்பவர் கேட்க, அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளன் என்று அவர் சொன்னார்.
கடன் கொடுப்பவர் அதை ஏற்றுக் கொண்டு உண்மை சொன்னீர். நான் அல்லாஹ்வையே சாட்சியாளனாகவும், பொறுப்பாளனாகவும் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி 1000 தீனார்களை கடனாகக் கொடுத்தார். குறிப்பிட்ட தினத்தைக் குறித்து, இத்தினத்திற்குள் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
கடனை பெற்'றவர் தன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு கடலில் பயணம் செய்தார். குறித்த காலம் முடிந்ததும் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக கடன் கொடுத்தவரின் ஊருக்குச் செல்வதற்கு கடனாளி முடிந்தவரை முயற்சித்தார். ஆனால் பயணம் செய்ய கப்பல் கிடைக்கவில்லை.
எனவே, அம்மனிதர் ஒரு முடிவு செய்தார். ஒரு மூங்கில் குழாயை (பலகையை) எடுத்தார். அதற்குள் 1000 தீனார் பணத்தையும் கடன் கொடுத்தவருக்'கு ஒரு கடிதத்தையும் வைத்தார். அதனை மீண்டும் நல்ல முறையில் மூடினார். அதை எடுத்துக் கொண்டு கடலருகே வந்தார். 'யா அல்லாஹ் நான் ஒரு மனிதரிடம் 1000 தீனாரைக் கடனாகக் கேட்டேன். அவர் சாட்சி வேண்டும் என்றார். நான் அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன் என்றேன். அவரும் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார்.
அவர் பொறுப்பாளர் ஒருவர் வேண்டும் என்றார். நான் உன்னை பொறுப்பு சாட்டியபோது, அவர் அதையும் அங்கீகரித்தார். குறித்த தினத்தில் இப்பணத்தை அவரிடம் ஒப்படைக்க நான் முயற்சித்தேன். முடியவில்லை. இந்தப் பணத்திற்கு உன்னைN ய நான் பாதுகாவலனாக்குகிறேன் என்று கூறி மூங்கிலை கடலில் வீசினார். அது அசைந்தாடிச் சென்றது. பின்னர் இம் மனிதர் தன் ஊர் போகும் கப்பலில் திரும்பிச் சென்று விட்டார்.
கடலின் மறுபக்கத்தில் கடன் கொடுத்தவர் கப்பலில் பணம் வரும் என்று எதிர்பார்த்திருந்தார். காத்திருந்தவர் கடலில் ஒரு மூங்கில் மிதந்து வருவதைக் கண்டார். வீட்டிற்கு விறகுக்காக அதனை எடுத்துச் சென்றார். அதனை வீட்டில் போய் பிளந்தபோது அதில் பணமும், கடிதமும் இருந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்.
சிறிது காலத்திற்கு பின் கடன் பெற்றவர் கடன் கொடுத்தவரிடம் புதிதாக 1000 தீனார்களை எடுத்துக் கொண்டு வந்தார். பின்பு அவரிடம், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உங்கள் பணத்தைத் தருவதற்காக முயற்சித்தேன். அப்போது வர வாகனம் கிடைக்கவில்லை. இப்போதுதான் இங்கு வர வாகனம் கிடைத்தது. தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்.
நீர் எனக்கு அனுப்பியதை அல்லாஹ் என்னிடம் சேர்த்து விட்டான் என்று கடன் கொடுத்தவர் சொன்னதும் தான் கொண்டு வந்த 1000 தீனாரை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
இந்த நபி மொழி புகாரி கிரந்தத்தில் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக பதியப்பட்டுள்ளது.
படிப்பினை:
இவர்களின் நம்பிக்கைக்கு அல்லாஹ் செய்த உதவி உங்களுக்குத் தெரிகிறது அல்லவா? அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவரை அல்லாஹ் கைவிட மாட்டான்.

No comments:

Post a Comment