Wednesday, January 7, 2015

யாருக்காக அழுதான்?

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையுமுடைய இறைவனைத் தொழும் புனித ஆலயம் அது. அங்கே ஒரு அதிகாலை நேரம், தொழுகைக்கான அழைப்பொலி இப்போதுதான் முடிகிறது. அந்த வெள்ளுடை மனிதர் பள்ளிவாசலுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கிறார். அவரை அறிந்தோருக்குத் தெரியும் அவர் வீரத்தின் விளை நிலமென்பது, ஆனால் அவரோ ஒரு அடிமையின் பண்புடன் அந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைகிறார்!.
இறைவனைத் தவறாமல் தொழும் இறையடியார்களின் கூட்டம் இன்னும் அங்கே வந்து சேரவில்லை. பொழுதும் இன்னும் விடியவில்லை. பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு அற்புதமான பொழுதாக அனைவரின் மனதையும் ஈரப்படுத்தும் சூழல் அங்கே நிலவியது,
ஒவ்வொருவராக வந்து உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொண்டும் நின்றுகொண்டும் அமைதியை மெறுகேற்றிக் கொண்டிருந்தார்கள். பொறுமை கோலோச்சியது எங்கும். நிசப்தம் நிறைந்த அந்த பரந்த கூடத்தின் தனிமையான ஒரு ஓரத்தில் ஒருவர், இருகரமேந்தியவாறு அழுதுகொண்டிருக்கிறார்!.
அவரது அழுகையும் அழுகையினூடான பிரார்த்தனையின் மெல்லிய சப்தங்களும் அவரின் அருகாமையை சலனப்படுத்தும் வகையில் இருக்கிறது.
அந்த வெள்ளுடை மனிதர் அவ்வழியாக செல்லும்போது, மெல்லிய விசும்பலுடன் அவரின் வேண்டுதலும் அந்த வெள்ளுடை மனிதரின் காதுகளைக் கவ்வுகிறது. நின்று நிதானமாய் கேட்கிறார் அந்த அழுபவரின் முழு பிரார்த்தனையையும்.
அந்த அழுபவரின் பிரார்த்தனை இவ்வாறு இருக்கிறது:
“இறைவா என் நன்பனை நீ என்நாளும் காப்பாற்றுவாயாக!,
அவனுக்கு எந்த நோய் நொடியும் ஏற்படாமல் காப்பாற்றுவாயாக!,
அவனுக்கு ஒரு சிறு துன்பம்கூட வராமல் காப்பாற்றுவாயாக!,
அவனுக்கு ஒரு பொருளாதாரக் கஷ்டம்கூட வராமல் காப்பாற்றுவாயாக!, அவனுக்கு உடலில் எந்த இடத்திலும் சிறு கீறல்கள் கூட ஏற்படாமல் காப்பாயாக!,
அவனுக்கு வாழ்வில் எந்த ஏமாற்றமும் ஏற்படாமல் காப்பாயாக!,
அவனுக்கு களைப்பு என்பதே ஏற்படாமல் காப்பாயாக!,
அவனுக்கு பசி என்பதே தெரியாமல் காப்பாயாக! ...” என்று நீண்ட பிரார்த்தனை ஒரு வழியாக முடிந்தாலும் அவனது கண்ணீர்த்துளிகள் மட்டும் இன்னும் நிற்காமல் வழிந்தோடிக்கொண்டிருந்தது!.
வெள்ளுடை மனிதர் அவனை மெல்லத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினார்.
“நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள்?
நீங்கள் யாருக்காக பிரார்த்திக்கின்றீர்கள்?
அவர் உங்களின் பரம எதிரியா?,
அப்படி என்ன பகை உங்களுக்குள்?
நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்கிறார்.
இந்த எதிர்பாராத கேள்வியில் திகைப்பும் சற்றே கோபமும் ஏற்பட அந்த அழுபவர் பதற்றத்துடன்,
“இல்லை இல்லை!, அவன் என் உயிரினும் மேலான நன்பன்! அவனுக்காகத்தான் நான் தினமும் இப்படி பிரார்த்திக்கின்றேன்!” என்றான் இன்னும் அழுதுகொண்டே.
“அப்படியானால், நீங்கள் கேட்கும் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டிருப்பானேயானால், இந்நேரம் உங்கள் நன்பருக்கு மரணம்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்! “
“அப்படியானால், நீ உண்மையில் அழுது அழுது பிரார்த்திப்பது உன்னுடைய எதிரிக்காக என்றல்லவா ஆகிறது? “ என்றதுடன், ‘ஒரு துன்பமும் இல்லாத நிலை என்பது மரணத்தில்தான் கிடைக்கும்’ என்பதனை விளக்கிப் புரிய வைக்கிறார் அந்த வெள்ளுடை மனிதர்!.
மேலும் அன்றய தொழுகை முடிந்ததும், அவனுக்காகவும் அனைவருக்காகவும் ஒரு அழகிய பிரார்த்தனையை சொல்லிக்கொடுக்கிறார்!.
அந்த அழகிய பிரார்த்தனை இவ்வுலகிலும் மறுமையிலும் உலகத்தாரின் நன்மைக்கான வேண்டுதலாய் நீள்கிறது. மனிதர்களுக்கான கடமைகளை நினைவுபடுத்துகிறது, பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுத் தருகிறது இன்னும் மானுடம் வெல்லும் பண்புகள் வெள்ளி முளைப்பதுபோல் வந்து வந்து அங்கே கூடியிருந்த மனிதர்களின் மனத்தடாகத்தை புனிதப்படுத்துகிறது. ஆம்!, அந்த நாள் இனிய நாளாய் பலருக்கும் விடிகிறது!.
அந்த வெள்ளுடை மனிதர் வேறு யாருமல்ல, அவர்தான் இறைத்தூதரின் மருமகனாகவும், தோழராகவும் இருந்த அலி பின் அபிதாலிப் (ரலி) அவர்கள்!.
அவரைப் பற்றித்தான் நபிகள் நாயகம் சொன்னது, “ நான் ஞானம் என்ற நகரமாயிருக்கிறேன், அலி அதன் நுழைவாயிலாக இருக்கிறார்! “.
(The English Translation of the Arabic words of the Prophet Muhammad (Peace be upon him) = “If I am the City of Knowledge, Ali is the Gate!”)

No comments:

Post a Comment