Thursday, July 9, 2015

லைலத்துல் கத்ரின் சிறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது. லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்'. (ஸூறதுல் கத்ர்)
மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.
ரமழானில் ஒரு தினத்தில் காணப்படும் லைலதுல் கத்ர் இரவை அல்குர்ஆனோ ஸூன்னாவோ சரியாக வரையருத்து கூறவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதனை ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் தேடிக்கொள்ளுமாறு கூறினார்கள்.
அதிலும் ரமழான் மாதத்தில் இறுதி பத்தில் ஒற்றைப்பட இரவுகளில் தேடிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். லைலதுல் கத்ருடைய பூரண பலன்களை பெற்று இறை திருப்தியை அடைந்துகொள்வதற்காக ரமழான் மாதத்தின் இறுதி பத்தில் ஒற்றை இரவுகளில் சிறந்த வணக்க வழிபாடுகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக.
குர்-ஆன் (ஸூறதுல் கத்ர்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
97:1 إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2 وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3 لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:4 تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5 سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2016. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.
2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!"
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
2018. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.
2019. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!"
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
2020. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.
2023. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள்

No comments:

Post a Comment