Tuesday, August 18, 2015

'விண்கற்களை சாம்பலாக்குவது யார்?

'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்'  அல்குர்ஆன் 67:3,4
'பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்'.
அல் குர்ஆன் 21:32
இந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.
வளிமண்டலம் ஐந்து அடுக்குகளால் சூழப்பட்டுள்ளன.
1.கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கிலோ மீட்டர் உயரம் வரை.
2. படுகை அடுக்கு - 16 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை
3. நடு அடுக்கு - 50 கிலோ மீட்டரிலிருந்து 80 கிலோ மீட்டர் வரை.
4. வெப்ப அடுக்கு - 80 கிலோ மீட்டரிலிருந்து 1600 கிலோ மீட்டர் வரை.
5 - வெளி அடுக்கு: 1600 கிலோ மீட்டர் முதல் 10000 கிலோ மீட்டர் வரை
இந்த ஐந்து அடுக்குகளே நம்மை பல ஆபத்துகளிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றன. சூரிய ஒளியாகட்டும், பெரும் கற்களாகட்டும் இவை எல்லாம் நமது பூமியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கி விடும் சக்தி பெற்றவை.
'வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்.'
-அல்குர்ஆன் 67:17
வானத்திலிருந்து மழை பொழிவதைப் பார்த்திருப்போம். ஆனால் கற்களே மழையாக பொழிய வாய்ப்புள்ளதா? செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று வருகின்றன. இவற்றில் சில புவியின் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மணிக்கு 43200 கிமீ முதல் 57600 கிமீ வரையிலான அசுர வேகத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராக பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பூமியில் வசித்து வரும் நாமெல்லாம் சிதறுண்டு போவோம். ஏனெனில் மேலிருந்து வரக் கூடிய கற்களில் சில 96000 சதுர மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை. இந்த பிரம்மாண்டமான கற்கள் பூமியை நேராக அடைந்து விடாமல் ஆகாய அடுக்குகள் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலிருந்து வரும் கற்களை வெப்பமடைய வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கி நமது பூமியின் மீது விழ வைக்கின்றன. பூமியின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கற்களை நம் மீது வீழ்ந்து விடாமல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

No comments:

Post a Comment