Wednesday, September 14, 2016

பெண்களை அடிமைப்படுத்துகின்ற மார்க்கமா, இஸ்லாம்?

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது தவறான புரிதல் ஆகும்.
ஒரே ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கூறுகின்றேன், கேளுங்கள்.
நீங்கள் பள்ளிவாசலுக்குள் போய் இருக்கின்றீர்களா? இல்லையேல் நான் உங்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்கின்றேன், உங்களுக்கு விருப்பம் இருக்கின்ற பட்சத்தில்தான்.
பள்ளிவாசலுக்குள் இமாம் (தலைவர்) நின்று தொழுகையை வழிநடத்துகின்ற இடத்துக்கு அருகில் மூன்று படிக்கட்டுகளைக் கொண்ட மேடை ஒன்று உள்ளது. இதனை மிம்பர் என்று சொல்வார்கள். உலகத்தில் மிம்பர் இல்லாத பள்ளிவாசலே இல்லை. மறுமை நாள் வரை - உலகம் அழிகின்ற நாள் வரை - உலகில் கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் அனைத்தும் மிம்பருடன்தான் கட்டப்படும்.
இந்த மிம்பருக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருக்கின்றார்.
அன்பு நபிகளார் முஹம்மத்(ஸல்) மதீனாவில் முதன்முதலாய் பள்ளிவாசலைக் கட்டிய போது மிம்பர் இருக்கவில்லை. தூண் ஒன்றின் அருகில் நின்றுதான் நபிகளார்(ஸல்) மக்களுடன் பேசுவார்கள்.
அந்த வேளையில் ஒரு பெண்மணி நபிகளாரிடம் வருகின்றார்.
‘இறைத்தூதரே! என்னிடம் ஒரு அடிமை இருக்கின்றார். அவருக்கு தச்சுத் தொழிலும் தெரியும். நீங்கள் உத்திரவிட்டால் அவரைக் கொண்டு மேடையைப் போன்ற ஒன்றை செய்து தருகின்றேனே..’ என்கிறார்.
‘மிம்பர் ஒன்றைச் செய்து தாருங்கள்’ என நபிகளார்(ஸல்) ஆமோதிக்கின்றார்கள்.
இவ்வாறாக இன்று பள்ளிவாசலின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கின்ற மிம்பருக்குப் பின்னால் இருப்பது ஒரு பெண்மணிதான். இது இஸ்லாமிய சமூகச் செயல்பாடுகளில் பெண்களுக்கு இருந்த பங்கேற்பையும்(Involvement) பங்களிப்பையும்(contribution) வெளிப்படுத்துகின்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்தும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கின்றேன், கேளுங்கள்.
இன்று இந்தியாவில் மிக அதிக அளவில் அமைப்புரீதியாக பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில்தான்.
ஜமாஅத்தின் மிக வலுவான சபையாக இருக்கின்ற மத்தியப் பிரதிநிதிகள் சபையில் (பொலிட் பீரோ) பெண்களுக்கு முப்பது சதவீத இடஒதுக்கீடு செய்திருப்பதும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தான்.
ஒரு பெண்மணியை அகில இந்தியச் செயலாளராகக் கொண்டிருக்கின்ற ஒரே அகில இந்திய இஸ்லாமிய அமைப்பும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தான்.
- 'இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும்', 'பெண்களை அடிமைப்படுத்துகின்ற மனிதநேய ஆர்வலர்களைக் கொண்ட அமைப்புதான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்' என்றும் பதிவிட்டிருந்தார் முன்னாள் பிபிஸி நிருபரும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றி ஒய்வுபெற்றவருமான டி. என். கோபாலன் அவர்கள். அதற்கு நான் அளித்திருந்த பதில்தான் மேலே பகிரப்பட்டது.
- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

No comments:

Post a Comment