Monday, August 21, 2017

தொழுகையில் மறதிக்கான ஸஜ்தா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
1. தொழுகையில் ரக்அத்தின் எண்ணிக்கையை குறைத்து தொழுதுவிட்டால், விடுபட்ட ரக்அத்தை மட்டும் தொழுதுவிட்டு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும். பின்பு அதே நிலையிருந்து கொண்டு "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். பின்பு இருப்புக்கு வந்து மீண்டும் ஸஜ்தா செய்து விட்டு ஸலாம் கூறி முடிப்பது போதுமானது.

482. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள்.
அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது“ என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(ரலி), உம்ர்(ரலி) ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் “இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். “குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை” என்று நபி(ஸல்) கூறிவிட்டு (மக்களை நோக்கி) “துல்யதைன் கூறுவது சரிதானா?“ என்று கேட்க “ஆம்“ என்றனர் மக்கள்.

(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை


2. 3 ரக்அத் or 4 ரக்அத் தொழுகையில் முதல் அத்தஹியாத்தில் அமர மறந்தால், இப்படி மறக்கும் போது பின்னால் தொழும் மஃமூம்கள் ஸுப்ஹானல்லாஹ் என்று சொல்லி நினைவு படுத்த வேண்டும். இதனால் அவர் அத்தஹியாத்தில் அமரவில்லை என்பதை இமாம் உணர்ந்துகொள்வார். இமாம்  எழுந்துவிட்டால் திரும்பி அமராமல் தொழுகையை தொடர வேண்டும். பின்பு தொழுகையை முடிக்கும் முன்னால் இரண்டு ஸுஜூத்களை செய்துவிட்டு ஸலாம் கூறி முடிக்க வேண்டும்.

829. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது,உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு


3. ரக்அத்துக்களின் எண்ணிக்கையை கூட்டி தொழுது ஸலாம் கூறி முடித்து விட்டால், அது சுட்டிக்காட்டப்பட்டாலோ அல்லது ஞாபகம் வந்தாலோ அதே நிலையில் அமர்ந்து தக்பீர் சொல்லி இரு ஸஜ்தாக்களை செய்துவிட்டு ஸலாம் கூறி முடிக்க வேண்டும்

1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “என்ன விஷயம்?“ எனக் கேட்டார்கள். “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்“ என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22. தொழுகையில் ஏற்படும் மறதி


4. ரக்அத்துக்களின் எண்ணிக்கையில் சந்தேகம் வந்தால், தொழுகையை முடிக்க முன்பு இரண்டு ஸஜ்தாக்கள் செய்துகொள்வது போதுமானது.


1232. “உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22. தொழுகையில் ஏற்படும் மறதி

No comments:

Post a Comment