Thursday, May 10, 2018

குளத்து நீரை கூஜாவில் அடைத்த ஹாஜா!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமின் பக்கம் மனிதர்களை அழைப்பதற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் என்ற ஊருக்கு வந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மிக நெருங்கிய "முரீது" சிஷ்யர்களும் இருந்தார்கள்.
அக்காலகட்டதில் அஜ்மீர் அதிபதி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அந்த மன்னனின் பெயர் பிரதிவிராஜ்.
ஹாஜாவுடன் அங்குவந்த அனைவரும் காடுகள் சூழ்ந்த ஒரு பகுதியில் தங்கியிருந்து வணக்க வழிபாடுகள் செய்து வந்தார்கள். இந்தச் செய்தி ஆட்சி செய்த கொண்டிருந்த அரசனுக்கு எட்டியது. கோபம் கொண்ட அரசன் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு தூது அனுப்பினான். ஹாஜா மறுத்துவிட்டார். கோபம் கொண்ட அரசன் அவர்களுக்குப் படிப்படியாக இன்னல்களும், தொல்லைகளும் கொடுக்கத் தொடங்கினான்.

ஹாஜாஜீயும், அவர்களுடன் வந்திருந்த பக்தர்களும் குளிப்பதற்கும், குடிப்பதற்கும், "வுழு" என்ற சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்த "அனாஸ்கார்" என்ற குளத்தில் நீர் எடுக்கக் கூடாதென்றும், அக்குளத்தண்டை செல்லக்கூடாதென்றும் தடைவிதித்தான்.
சில நாட்கள் பொறுமை செய்து கொண்டிருந்த ஹாஜாஜீ சீறி எழுந்தார்கள். "வுழு" என்ற சுத்தம் செய்வதற்காக அவர்கள் பயன் படுத்தி வந்த "கூசா" சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு "அனாஸ்கார்" குளத்தை நோக்கி விரைந்தார்கள். அங்கு அரசனால் காவலுக்கு நியமிக்கப்பட்டிருந்த போர் வீரர்கள் ஹாஜாஜீ அவர்களைக் கண்டதும் மயக்கமுற்று ஒருவர் பின் ஒருவராக மயங்கித் தரையில் விழுந்தார்கள். ஹாஜாஜீ தங்களின் "கூசா" கேத்தலை குளத்தில் வைத்தார்கள். அவ்வளவுதான். என்னே புதுமை கடல் போன்று பரந்து விரிந்து காணப்பட்ட "அனாஸ்கார்" குளத்து நீர் எல்லாமே ஒரு சொட்டுக்கூட பாக்கியின்றி ஹாஜாஜீயின் சிறிய கேத்தலில் புகுந்து விட்டது. குளம் வற்றி வரண்டு போயிற்று. ஹாஜாஜீ கேத்தலை - கூஜாவை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
இச் செய்தி கேட்டுச் சீறி எழுந்த அரசன் பிரிதிவிராஜ் என்ற "பத்ஹுறா" தனது அரச சபை சூனியக்காரன் - மந்திரவாதி "அஜய்பால்" என்பவனை அழைத்து மலையிலுள்ள பெரும் கல்லொன்றை ஹாஜாவின் மீது தள்ளி அவரைக் கொண்றுவிடு என்று கர்ஜித்தான். மந்திரவாதி "அஜய்பால்" மலையிலுள்ள பெரும் கல்லொன்றை மலையடியில் வாழ்ந்து வந்த ஹாஜாஜீ மீது மந்திரம் ஜெபித்து உருட்டினான். அக் கல் ஹாஜாஜீயை நோக்கி மின்னல் வேகத்தில் உருண்டு வந்தது. ஸுப்ஹானல்லாஹ்! ஹாஜாஜீ தனது வலக்கரச் சுட்டு விரலால் அக்கல்லைக் குத்தி தடுத்து நிறுத்தினார்கள். (அக் கல் இன்றும் ஹாஜாஜீ மலையில் சுட்டு விரல் அடையாளத்துடன் உள்ளது)
ஹாஜாஜீயின் "கறாமத்" அற்புதத்திற்கு முகம் கொடுக்;க முடியாமற்போன மன்னன் "பத்ஹுறா" பிரதிவிராஜ் ஹாஜாஜி அவர்களின் காலடி வந்து (மகானே! இறைநேசரே! நீங்கள்தான் ராஜஸ்தான் மாநிலத்தின் அரசர் நான் அல்ல. அஜ்மீர் நகரின் அதிகாரி நீங்கள்தான். நான் அல்ல. "அனாஸ்கார்" குளம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் நீர் வழங்கிக் கொண்டிருந்தது. இன்று அது வற்றி வரண்டு போயிற்று. கால் நடைகள் நீரின்றி செத்து மடிகின்றன, மனிதர்கள் ஒருவர் பின் ஒருவராக உண்ண உணவின்றியும், பருக நீரின்றியும் மரணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் என்றுமில்லாதவாறு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நான் இஸ்லாம் மார்க்கத்தில் இனைகின்றேன். இம் மாநில மக்களும் இனணகிறார்கள். குளத்து நீரைத் தாருங்கள்) என்று ஹாஜாஜீயின் காலடியில் மண்டியிட்டுக் கிடந்தான் மன்னன்.
கருணையுள்ள ஹாஜா "கூஜா" வை எடுத்துக் கொண்டு "அனாஸ்கார்" குளத்தண்டை சென்று அதை வரண்டு போயிருந்த குளத்தில் - தரையில் வைத்தார்கள். ஸுப்ஹானல்லாஹ்! கூஜாவிலிருந்து கடல் மடை திறந்தாற்போல் நீர் ஊற்றெடுத்து வந்தது. "அனாஸ்கார்" குளம் முன்பு இருந்ததை விட பன் மடங்கு நீர் அதிகமான குளமாயிற்று.
இதை நேரில் கண்டும், கேள்விப் பட்டும் அறிந்த இந்துக்களில் 90 இலட்சம் பேர் ஹாஜாஜீயின் கரம் பற்றி இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரேயொரு "கறாமத்" அற்புதம் மூலம் 90 இலட்சம் மக்களை இஸ்லாமில் இணைத்த பெருமை ஹாஜா முயனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.
ஒரு நொடியில் ஒரேயொரு “கறாமத்” அற்புதம் கொண்டு 90 இலட்சம் மக்களை - காபிர்கள்- இஸ்லாமாக்கினார்கள் ஹாஜா இது வரலாற்று உண்மை.
நன்றி : பேரா. H முஜீப் ரஹ்மான் - மசூறா 

No comments:

Post a Comment