Friday, November 28, 2014

சபர் மாதமும் ஒடுக்கத்துப் புதனும்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர். இம்மாதமானது மிடிமைக்குரிய மாதம் எனவும், இம்மாதத்தில்  எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்கலாகாது என்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது.

இந்த நாளில் வாழை இலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம் குறிப்பாக இந்திய, இலங்கை முஸ்லீம்களிடம் இருந்து வந்தது. 
இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள்போல் திறமையும் அறிவு முதிர்ச்சியும்  பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்ததுங் கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாத்துக்கு முரனானதென்றோ, "பித்அத்" என்றோ, மூடநம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை. எழுதியதுமில்லை.

 எனவே இது பற்றி திருக்குர்ஆனும் நபி மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்பட்ட தகவல்களையும் சுருக்கமாகத் தருகின்றோம்.

இமாம்களையும், மகான்களையும் தூக்கி எறிந்துவிட்டும், அவர்களால் எழுதப்பட்ட நூல்களைப் புறக்கணித்து விட்டும் தமக்கு குர்ஆனும், ஹதீதும் போதுமென்று சொல்பவர்களுக்கு இவ்விளக்கம் இனிக்கவும் மாட்டாது மணக்கவும் மாட்டாது.கழுதைக்கு குங்குமம் மணப்பதில்லை என்பது பொய்யா மொழி. 

கண்டதெல்லாம் திருக்குர்ஆனிலிருந்தும் ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒன்றைக் காலில் நிற்போர் "இல்முல் இல்ஹாம்" "இல்முல் லதுன்னீ" என்று ஒரு வகை அறிவு உண்டு என்பதையும் சிந்தனையில் கொள்ளல் வேண்டும். இப்படி ஒரு அறிவு உண்டு என்பது அல்குர்ஆனில் இருந்தும், ஹதீதிலிருந்தும் தெளிவான ஆதாரங்கள் கொண்டு நிறுவப்பட்டதே ஆகும். நபீ மார்களுக்கு வஹீயும் இருந்தது இல்ஹாம் என்ற ஒரு அறிவும் இருந்தது. ஆனால் நபீமார் அல்லாத வலீமார் நல்லடியார்களுக்கு இல்ஹாம் மட்டும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஒருவர் ஒரு விடயத்தை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம்  நீங்கள் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீதிலும் ஆதாரம் உண்டா? என்று கேட்கும் போது அது எனக்குத் தெரியாது ஆனால் இதை இல்ஹாம் மூலம் நான் சொன்னேன் என்று அவர் சொன்னால் அவரை ஏற்றுக் கொள்வதா? அல்லது இல்ஹாமும் கத்தரிக்காயும் என்று கூறி அவரைத் தூக்கி எறிவதா? அவரைத்தூக்கி எறிந்தால் திருக்குர் ஆனும் நபீ மொழிகளும் தருகின்ற இல்ஹாம் என்ற அறிவைத் தூக்கி எரிந்ததாகப் போய்விடும். ஆகையால் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்வதாயினும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளமுடியாது. அவரை ஷரீஅத் என்ற தராசில் நிறுத்துப் பார்க்க வேண்டும். அவரின் கொள்கையும் நடவடிக்கைகளும் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருத்தல், அவர் ஒரு நல்லடியார் என்று பரவலாக அறியப்பட்டிருத்தல், அவர் சொன்ன விடயம் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருந்தால் அவரின் பேச்சை ஏற்றுக் கொள்ளவேண்டுமே அன்றி அவரை தூக்கி எறிந்துவிடலாகாது.

இந்த அடிப்படையில் ஒடுக்கத்துபுதன் தொடர்பாக வலீமார்களும் இறைஞானிகளும் கூறியுள்ள கருத்துக்களை சிந்தனையில் கொண்டு செயல்படவேண்டும். 

சபர் மாதம் மிடிமைக்குரிய மாதமா? 
சபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்ற அபிப்பிராயம் நபீ (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன் வாழ்ந்த மக்களிடம் இருந்தது. இது ஒரு தவறான அபிப்பிராயமாகும். இதனால்தான் நபீ (ஸல்) அவர்கள்.

لا عدوي ولا طيرة ولا هاماة ولا صفر في الاسلام
இஸ்லாம் மார்கத்தில் தோற்று நோய், பறவை ஜாதகம், ஆந்தை அலறுவதால் மரணம் நிகழ்தல், சபர்  மாதம்  மிடிமைக்குரியது என்பன இஸ்லாம் மார்கத்தில் இல்லை என்று அருளினார்கள். 
இதன் கருத்து சபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் இல்லை என்பதாகும். ஆயினும் அல்லாஹ் நாடினால் மிடிமை, கஷ்டம் நோய் போன்றவை சபர் மாதத்திலும் தருவான். ஏனைய மாதங்களிலும் தருவான். ஆயினும் சபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை சுயமாக ஏற்படுத்தும் என்று கொள்வது பிழையானதாகும். அதாவது ஷிர்க் என்ற இணை வைத்தலை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாக செய்வதற்கு எவருக்கும் ஆற்றல் இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். "லா சபர பில் இஸ்லாம்" என்ற வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது. தவிர சபர் மாதம் எவருக்கு மிடிமை, கஷ்டம், நோய் போன்றவை வராதென்பது கருத்தல்ல.

நாட்களில் கெட்ட நாள் உண்டா? 
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள், மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. 
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ("ஆத்" கூட்டத்தினர் மீது) "நஹ்ஸ்" உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் - கமர் அத்தியாயம் - வசனம் - 101 

فارسلنا عليهم ريحا صرصرا في ايام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது "நஹ்ஸ்" உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் - புஸ்ஸிலத் அத்தியாயம் - வசனம் - 16 

மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாக  கூறியுள்ளான். 

மேற்கண்ட இரு வசனங்களில் முந்திய வசனத்தில் "நஹ்ஸ்" என்ற சொல் ஒருமையாகவும் இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் "நஹ்ஸ்" உடைய நாளொன்று உண்டு என்பது தெளிவாகின்றது. அந்நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது இவ்விவரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் "ஆத்" கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களையும் இங்கு தருகின்றோம்.
அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்துக் கூறி உள்ளனர். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை. தப்சீர் றூஹுல் மஆநீயில் ஆசிரியர் அவர்கள் தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27 ம் பாகம் 119 ம் பக்கத்தில் அது  ஷவ்வால் மாதப் பிற் பகுதியிலுள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள். அல்லாமா வகீஉ (றஹ்) அவர்கள் "குறர்" என்ற நூலில் ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன்கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்று நபீ (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களைத்தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் (ரஹ்) அவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள். இமாம் தபறானீ (ரஹ்) அவர்கள் அந்நாள் புதன் கிழமை என்று தங்களின்தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபூ ஹாதம், இப்னு ஜவ்ஸீ, இப்னு றஜப், சகாவீ ஆகியோர் "ழயீப்"  பலம் குறைந்தவை என்று கூறி உள்ளனர்.

புதன் கிழமை "நஹ்ஸ்' உடைய நாள் என்று தகவல்  இருப்பது போல அது நல்ல நாள் என்றும் தகவல் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ, ஷுஆபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாம் புர்ஹானுல் இஸ்லாம் (ரஹ்) அவர்கள் "ஹிதாயஹ்" என்ற நூலில் வந்துள்ளதாக "தஃலீமுல் முதஅல்லிம்" என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப் படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள்- ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடக்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாக கணிக்கப் படுகின்றது.


எவனாவது புதன் கிழமை மரங்களை நட்டு "சுப்ஹானல் பாஇதில் வாரிதி" என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபீ மொழியை ஜாபீர் (ரழி) அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் தைலமீ (ரஹ்) அவர்களும்  தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.

புதன் கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்பதற்கு சில தகவல்களை இங்கு தருகிறோம். "எனது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களை பணித்திருப்பேன்" என்று நபீ (ஸல்) அவர்கள்  கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி "பிர்தௌஸ்" என்ற நூலில் பதிவாகி உள்ளது"

வார நாட்களில் சனிக்கிழமை - சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். வியாழக் கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும். வெள்ளிக் கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும். என நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்ததாக அபூயஃலா (ரஹ்) அவர்களும், அபூ சயீத் (ரஹ்) அவர்களும் அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் (ரஹ்) அவர்களும், தமாம் (ரஹ்) அவர்களும் "அல்பவாயித்"என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆயினும் சகாவீ (ரஹ்) அவர்கள் இந்த நபீ மொழியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள்.

வெண்குஷ்டம்,கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு மாஜாவும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும் அவ்வாறு செய்தால் குஷ்ட நோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் செல்வது நல்லதெனினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்வது நல்லதென்று தகவல்கள் கூறுகின்றன.

புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாக கருதப்படும் என்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் "அர்றவ்ழஹ்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்.  


"ரூஹுள் பயான்" என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல்  வால்யூம் 09 பக்கம் 324 புதன் கிழமையில் சுவர்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப் படுவதால் அன்று குளிப்பது சிறந்ததென்று கூறப் பட்டுள்ளது.


தண்டனை பெற்ற எந்த ஒரு கூட்டமாயினும் அது புதன் கிழமையிலேயே தண்டிக்க பட்டுள்ளது. இத்தகவல் ரூஹுள் பயான் வால்யூம் 08 பக்கம் 328 இல் இடம்பெற்றுள்ளது.


சபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும், வருட நாட்களில் அந்நாள் ஒன்று மட்டுமே கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக "முஜர்றபாதுத் தைறபீ" என்ற நூல் 103 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.

அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஷகர் (ரஹ்) அவர்கள், தங்களின் ஞான குரு ஹாஜா முயீனுத்தீன் (ரஹ்) அவர்களின் அவ்ராத் தொகுப்பில் பின்வருமாறு இருக்கத் தான் கண்டதாக கூறியுள்ளார்கள்.


ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் - துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும், குல்ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான். பின்பு "சலாம்" என்று சொல்லப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக்குடிக்கவும் வேண்டும்.
 பழாயிறுஷ் ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் - பக்கம் - 33 ,34 

சபர் மாதம் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பது சிறந்ததென்று அநேகர் அபிப்பிராயம் கூறுகின்றனர் என்றும். 

من بشرني بخروج صفر ابشره بالجنة

சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் "ஹயாதுல் ஹயவான்" என்ற நூல் முதலாம் பாகம் 120 ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
"இஆனதுத் தாலிபீன்" என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும்,  மக்காவில் பிறந்து மதீனாவில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ (ரஹ்) அவர்கள் தங்களின் "நிஹாயதுல் அமல்" என்ற சட்ட நூலில் 208 ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய், கஷ்டங்கள், சோதனைகள், "லவ்ஹுல் மஹ்பூல்" பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு சபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப் பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாது என்று கூறியுள்ளார்கள்.

ஒடுக்கத்துப்புதன் கதையும், வாழை இலையில் "இஸ்ம்" எழுதிக்குடிக்கும், குளிக்கும் கதையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூட நம்பிக்கை என்று சொல்வோர் மேற்கண்ட நூலாசிரியர் மக்கஹ்வில் பிறந்து திரு மதீனாவில் சமாதி கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் குறிப்பாக 'சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் "நஹ்ஸ்" மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபீ (ஸல்) அவர்களுக்கு மரண வருத்தம் "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரங்களிலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம், போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் "ஹறாம்" ஆகவோ "பித்அத்" ஆகவோ "ஷிர்க்" ஆகவோமாட்டாது.
அருள் பெற நாடி திருக்குர்ஆன்  வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

எனவே "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ காகிதத்திலோ எழுதிக் கரைத்துக்  குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பது "முபாஹ்" ஆகுமாக்கப்பட்ட காரியமே அன்றி அது எந்த வகையிலும் மார்கத்துக்கு முரணாகி விடாது. அதனால் ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இதை எதிர்ப்போர் இவ்விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து இச்செயல் "ஷிர்க்" என்றும் "பித்அத்" என்றும் "மூட நம்பிக்கை" என்றும் "பத்வா" வழங்குவதையும், மிம்பர் மேடைகளில் முழங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளில் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு செயல்பட முடியுமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ்வழக்கம் "ஹறாம்" என்பதற்கோ "ஷிர்க்" என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் "முபாஹ்" ஆஹும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும். இதை எதிர்ப்போர் இது விடயத்தில் விரும்புவோர் செய்யட்டும் விரும்பாதோர் விட்டு விடட்டும் என்று சொல்லுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

திருக்குர்ஆன் வசனங்கள்

 سلام قولا من رب الرحيم 

سلام على عباد الذين اصطفى 

سلام على نوح في العلمين سلام على ابراهيم 

سلام على موسى وهارون 

سلام على الياسين 

سلام هي حتى مطلع الفجر  



      இது கடந்த 2006-03-24 அன்று இலங்கையைச் சேர்ந்த அதி சங்கைக்குரிய அறிஞர் Dr. அஷ் ஷெய்க் ஷம்சுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் எழுதப்பட்டு இறாக் நட்புறவு ஒன்றியத்தால் விளியிடப்பட்ட பிரசுரத்தில் இருந்து உங்களுக்கு இக்கருத்துக்களை  வழங்கினோம்.

No comments:

Post a Comment