Wednesday, December 3, 2014

பச்சைத் தமிழர்

பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்டவர் காமராஜர். பெரியார் பாராட்டியது போலவே காமராஜர் ஆரம்ப முதல் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லாலும், செயலாலும் உண்மையான ஒரு தமிழராகவே வாழ்ந்தார்.
தமிழனின் உடையாகிய வேட்டி, துண்டு, சட்டை ஆகியவற்றையே அணிந்தார் . உள்ளூரிலும், டில்லி மற்றும் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அவர் இந்த எளிய உடையைத் தான் அணிந்தார்.
தனது வாழ்நாளில் அவர் தமிழர் உடையைத் தவிர வேறு உடையை அணிந்ததே இல்லை. ரஷ்ய நாடு மற்றும் பல மேலை நாடுகளுக்குப் பயணம் சென்ற போது கூட அவர் உடை இதுதான்.
அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர்களாக வந்த தமிழர்கள் காங்கிரஸ் மாநாடுகளில் தங்கள் தலைமை உரையை ஆங்கிலத்திலோ இந்தியிலோ பேசினார்கள். ஆனால் அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழிலே தனது தலைமையுரையை நிகழ்த்திய ஒரே தலைவர் காமராஜர் தான்.
1964-ஆம் ஆண்டு புவனேஸ்வரம் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர் தமிழில் நிகழ்த்திய தலைமை உரையைக் கேட்டு நேரு உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் கைதட்டி மனமாரப் பாராட்டினார்கள்.
இவ்வாறு தமிழுக்கு வடநாட்டவர் மத்தியில் நிலையான ஒரு புகழைப் பெற்றுத் தந்தவர் காமராஜர் தான்.
காமராஜர் பச்சைத் தமிழர் என்பதற்கு இன்னொரு உதாரணமும் உண்டு. மற்ற தலைவர்கள் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து பதவியேற்பார்கள்.
ஆனால் காமராஜர் முதன் முதலில் தமிழக முதல்வர் பதவி ஏற்க தமிழ்ப் புத்தாண்டு தினத்தைத்தான் தேர்ந்தெடுத்தார்.
அவர் பதவி ஏற்ற நாள் 1954 ஏப்ரல் மாதம் 13 ஆகும். இவ்வாறு தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் புகழைத் தந்த காமராஜரை மிகவும் பொருத்தமாக பச்சைத் தமிழர் என்று பெரியார் அழைத்தார்.
1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள். தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி காமராஜர் தமிழ் நாட்டின் முதல் மந்திரியாகப் பதவியேற்றார்.
நாள் முழுவதும் உழைக்கிறவர்களை கூலிக்காரர்கள், வேலைக்காரர்கள் என்பதாகக் குறைவாகப் பேசுகிறோம். உழைப்பே சிறிதும் இல்லாமல், பிறருடைய உழைப்பினால் வாழ்க்கை நடத்தி வருகிற சோம்பேறிகளை மகாராஜர் அல்லது எஜமான் என்று சொல்கிறோம்.
ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கவும், அவர்கள் நல்வாழ்வு வாழவும் வேண்டியே நான் முதன்மந்திரியாகப் பதவி ஏற்கிறேன். எனக்கு இந்தப் பதவி அவசியமில்லை. தேசமக்களின் வாழ்வே பெரிது.''
- காமராஜர் முதன் மந்திரியானதும் கூறிய முதல் வார்த்தைகள் மேலே இருப்பவை.

No comments:

Post a Comment