Saturday, December 6, 2014

கட்சிப்பணி என்றால் உயிர்

காமராஜர் இளைஞராக இருந்தபோது காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். தாமே கம்பத்தில் ஏறிக் கட்சிக் கொடியை கட்டுவார். நோட்டீஸ் விநியோகிப்பார். பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களுக்கு கடிதம் எழுதி அவர்களைக் கூட்டத்துக்கு வரவழைப்பது, கூட்டம் நடத்துவதற்கான நிதியினை கடை கடையாகச் சென்று வசூல் செய்வது என்று எல்லாக் காரியங்களையும் தாமே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

நீதிக்கட்சிதான் காங்கிரசுக்குப் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் சார்பாக எங்கெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பதைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார். அந்தக் கூட்டங்களில் சுதந்திரத்துக்கு எதிராகப் பேச்சாளர்கள் தாறுமாறாகப் பேசுவது வழக்கம்.
அந்தக் கருத்துக்களுக்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கூட்டம் போட்டு அவர்களுடைய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்க வைப்பார். ஓர் ஊரில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டால், அந்த ஊரில் உள்ள மக்கள் மட்டும் அதைக் கேட்டால் போதும் என்று நினைக்க மாட்டார்.
அருகில் உள்ள ஊர்களுக்கு எல்லாம் தாமே சென்று பொதுக்கூட்டம் பற்றி அறிவிப்பார். அந்த அறிவிப்பினை எப்படிச் செய்வார் தெரியுமா?
இடுப்பில் தண்டோராவைக் கட்டிக் கொள்வார்.
ஊருக்கு முச்சந்தியில் நின்று கொள்வார். பொதுக்கூட்டம் நடக்க இருக்கும் இடத்தைச் சத்தம் போட்டுச் சொல்வார். இப்படியே ஊர் ஊராகச் சென்று அறிவிப்பு செய்வார். அருகில் இருக்கும் ஊர்களுக்கு நடந்தே சென்று விடுவார்.
தொலைவில் உள்ள ஊர்களுக்கு எல்லாம் வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்வார். நண்பர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு அரிக்கேன் விளக்கு சகிதம் கிராமங்களுக்குச் செல்வார்.
கட்சிப் பணியை உயிராக நினைத்து செய்தார். அறிவிப்பை முடித்துவிட்டு வருவதற்குள் நன்றாக இருட்டி விடும். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தின் துணையோடு வீடு வந்து சேர்வார். கட்சிப் பணியை உயிராக நினைத்து செய்தார்.

No comments:

Post a Comment