Thursday, December 18, 2014

தேடி வந்த பதவிகள்

பதினைந்து வயது முதலே காங்கிரஸ் கட்சியின்பால் பற்றுக் கொண்டு, பணியாற்றத் தொடங்கினார் காமராஜர். இருப்பினும், 1924-ம் ஆண்டில் தான் தனது 21-வது வயதில் நான்கணா செலுத்தி காங்கிரசில் அடிப்படை உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் வகித்த பதவிகள் வருமாறு:-
* 1930-ம் ஆண்டில் பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைவராகவும், விருதுநகர் கே.எஸ். முத்துசாமி பொதுச் செயலாளராகவும் இருந்த ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் காமராஜர் உறுப்பினரானார்.
* 1931-ல் மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். அதே ஆண்டில் மாகாண காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1935-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.
* 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது தலைவராக இருந்தவர் சத்தியமூர்த்தி.
* 1940 பிப்ரவரி 15-ந்தேதியன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் 1954-ம் ஆண்டு வரை (இடையில் 2 ஆண்டுகள் தவிர) தொடர்ந்து 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரே நீடித்தார்.
* 1945-ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு உறுப்பினரானார்.
* 1949-ம் ஆண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் ஆனார்.
* 1963-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். 1967-ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.
காமராஜரைத் தானாகவே தேடி வந்த இந்தப் பதவிகளைப் போலவே அரசுப் பதவிகளும் அவரைத் தேடி வந்து வட்டமிட்டு வரிசையாக நின்றன. விபரம் வருமாறு:-
* 1937-ல் சாத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
* 1941-ல் விருதுநகர் நகரசபை உறுப்பினராகி, ஒரே ஒரு நாள் நகர சபைத் தலைவராக இருந்து அன்றே அப்பதவியை ராஜினாமா செய்தார்.
* 1946-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார்.
* 1952-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
* 1954-ல் தமிழக முதல்-அமைச்சர் ஆனார். அதே ஆண்டில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரானார்.
* 1957-ல் விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரானார். இரண்டாவது முறையாக முதல்வரானார்.
* 1962-ல் மீண்டும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார்.
* 1969-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1971-ல் மீண்டும் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்நாளின் இறுதி வரை அப்பதவியை வகித்து வந்தார்.

No comments:

Post a Comment