Sunday, December 7, 2014

தொழுகையின் முக்கியத்துவம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்!

தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவக் கலிமாவிற்கு அடுத்தபடியாக தலையாய கடமையாக இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் எத்தகையதெனில், “ஒரு முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளக்கும் (காஃபிர்) இடையிலுள்ள வித்தியாசமே தொழுகை தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சிறிய தொகுப்பில் பர்லு, நபில் மற்றும் சுன்னத் தொழுகை பற்றிய சிறு குறிப்புகளைப் பார்ப்போம்.
பர்லு தொழுகை: -
இது ஒவ்வொரு நாளும் நேரம் குறிக்கப்பட்ட ஐந்து நேர கட்டாய தொழுகையாகும். ஒருவர் இந்த தொழுகைகளை முறைப்படி சரியாக தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை பெறுவார். ஒருவர் இவற்றை தொழவில்லையெனில் கேள்வி கணக்கு கேட்கப்பட்டு தண்டணை அளிக்கப்படுவார்கள்.
நபில் தொழுகை: -
இவைகள் அதிகப்படியான (உபரியான) தொழுகை. ஒருவர் இவற்றை தொழுதால் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் இந்த தொழுகைகளைத் தொழவில்லை எனில் அவர் மீது பாவமில்லை.
சுன்னத் தொழுகை: -
தானாக மனமுவந்து தொழக் கூடிய தொழுகை. நபி (ஸல்) அவர்கள் இந்தத் தொழுகையைத் தொழுது வந்ததால் அவர்களைப் பின்பற்றி நாமும் தொழுது வருவது சிறந்ததாக இருக்கும். ஒருவர் இந்தத் தொழுகைகளை தொழுது வந்தால் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலி கிடைக்கும். ஒருவர் தொழவில்லை எனில் அவர் மீது குற்றமில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுது வந்த இந்த சுன்னத் தொழுகைகளை தொழாதவர் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் நற்கூலியை அடையக் கூடிய பாக்கியத்தை இழந்தவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.
சுன்னத் மற்றும் நபில் தொழுகையின் முக்கியத்துவம்:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
மறுமை நாளில் தொழுகையைப் பற்றித்தான் மக்கள் முதன்முதலாக விசாரிக்கப்படுவார்கள். மலக்குகளிடத்தில் நம்முடைய இறைவன், தான் நன்றாக அறிந்திருந்த போதிலும், சொல்லுவான், “என்னுடைய இந்த அடியானின் தொழுகையை (பர்லு), அவன் அதை சரியாக நிறைவேற்றி உள்ளானா அல்லது அதைவிட்டும் பாராமுகமாகி இருந்திருக்கிறானா என்று பாருங்கள். அவன் அதை சரியாக செய்திருந்தால் அதற்குரிய வரவு எழுதப்பட்டுவிடும். அதை விட்டும் அவன் தவிர்ந்திருந்தால் ஏதாவது அதிகப்படியான (நபில், சுன்னத்) தொழுகைகளை தொழுதிருக்கிறாரா என்று பார்க்கும்படி அல்லாஹ் கூறுவான். “அவர் அதிகப்படியான தொழுகையை தொழுதிருந்தால் அவர் விட்டு விட்ட கட்டாய தொழுகையை அவரின் அதிகப்படியான தொழுகையைக் கொண்டு ஈடுசெய்யுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்குப் பிறகு அவருடைய அனைத்து செயல்களும் இவ்வாறே முடிவு செய்யப்படும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.
எனவே சகோதர சகோதரிகளே! இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளையும் உபரியான நபில் தொழுகைகளையும் முறைப்படி பேணி தொழுது வருவோமாக. அல்லாஹ் நமக்கு அதற்கு அருள் புரிவானாகவும்.


No comments:

Post a Comment