Tuesday, December 2, 2014

மதிய உணவு திட்டத்துக்காக பிச்சை எடுக்கவும் தயார்

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டம் 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி அரசின் திட்டமாக அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

"வயிற்றுக்குச்சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்'' என்று முழங்கிய பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் இந்த திட்டத்தை காமராஜர் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் காமராஜர் பேசியதாவது:-
கடைசி மனிதனுக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டும் என்பது தான் காந்திஜியின் கொள்கை. கடையர்கள் எப்படிக்கடைத்தேறுவார்கள்? கல்வி கற்றால் கடைத்தேறுவார்கள். படிக்கின்ற கல்வியால் அறிவும் திறமையும் வளர்ந்தால், பிழைத்துக் கொள்வார்கள்; மனிதர்கள் மாறுவார்கள்.
நம் நாட்டில் பெரும்பாலோர்க்கு எழுத்தறிவே கிடையாது. ஊரில் பள்ளிக்கூடங்கள் இல்லாத போது எழுத்தறிவு எப்படி வரும்?
ஆகவே, நம்முடைய முதல் வேலை எல்லா ஊர்களிலும் பள்ளிகளைத் திறப்பது தான். அடுத்த பணி, எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் இலவசமாக்குதல்.
நிலம் ஈரமாக இருந்தால் தானே பயிரிட முடியும்? காய்ந்து கிடந்தால் எப்படிப்பயிரிட முடியும்? பிள்ளைகளின் வயிறு காய்ந்து கிடக்கும் போது, பாடம் சொல்லிக் கொடுத்தால் பாடம் ஏறுமா?
நம் நாட்டில் ஏழைகள் தான் அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போடுவது நல்லது.
அன்னதானம் என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல.
இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு அன்னதானம் அளித்தோம். இப்பொழுது பள்ளிக்கூடத்தைத்தேடி போய் அன்னதானம் செய்யச் சொல்கிறோம். இப்படிச்செய்தால் உயிர் காத்த புண்ணியமும் படிப்புக் கொடுத்த புண்ணியமும் நமக்கு வந்து சேரும்.
இதை உணர்ந்து இந்தப்பகுதியில் பல ஊர்க்காரர்கள் தாங்களே பகல் உணவுத்திட்டத்தை நடத்த முன் வந்து, ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராகச் சென்று பகல் உணவுத் திட்டத்திற்காகப் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்.''
இவ்வாறு முதல்வர் காமராஜர் பேசினார்.
இதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் உணர்ச்சிப்பிழம்பாக மாறிவிட்டனர் அவர்கள் " நீங்கள் ஏனய்யா பிச்சை எடுக்க வேண்டும்? நாங்கள் தேவையான உதவிகளைச் செய்கிறோம்'' என்று குரல் கொடுத்தனர்.
"ஏழைகளின் ரட்சகர் காமராஜர்'' என்று முழங்கினர்.
பகல் உணவுத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4200 பள்ளிகளில் 1,20,000 மாணவர்களுக்குப் பகல் உணவு வழங்கப்பட்டது.
கிராமங்களில் இந்தப் பகல் உணவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படத் தொடங்கியதன் மூலம் அனைத்துச் சாதிக்குழந்தைகளும் சமமாக ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடும் சூழ்நிலை தானாகவே உருவாயிற்று. இதற்காக எவ்விதப்பிரச்சாரமோ, இயக்கமோ தேவைப்படவில்லை.
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய அந்தக்காலத்தில் இந்தப்பகல் உணவுத்திட்டம் ஒரு மவுனப்புரட்சியாக அமைந்தது. இதனை அனைத்துக் கட்சியினரும் பாராட்டினர். ஒத்துழைக்கவும் முன் வந்தனர்.
கல்வி,சாப்பாடு, சமத்துவம் என்ற மூன்றும் மதிய உணவு எனும் ஒரே திட்டத்தால் சாத்தியமானது.

No comments:

Post a Comment