Sunday, July 5, 2015

வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை தாம்பரம் 
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ் என்று கேட்டார்". என்ன நீங்க இந்த வீட்டுல  இருக்கீங்க..? " என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க
ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்.
"அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன்" என்று அனுப்பி வைத்தார். "கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. "என்ன ஜீவா, இப்படி லேட்
பண்ணிட்டியே...?" என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். "ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது.
முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் " என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்தவார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்". என்பது தான்.
இனி எங்கே காண்பது இது போன்ற தலைவர்களை அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர் காமராஜர்

No comments:

Post a Comment