Tuesday, May 17, 2016

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும் - மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம்.குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்:
ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும்.
“உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர்ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். (ஆதாரம் முஸ்லிம் 4320)
இப்படியான பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல சஹாபாக்கள், சஹாபி பெண்மணிகளுடைய பெயர்களை தெரிவு செய்து வைக்க வேண்டும். அல்லது பொருத்தமான பெயர்களை தெரிவு செய்து பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் தவறான அர்த்தங்களை தரக்கூடிய பெயர்களை குழந்தைகளுக்கு வைத்து விட்டால் அதை கட்டாயம் மாற்றுவதோடு வேறு நல்ல பெயரை தெரிவு செய்து வைக்க வேண்டும் என்பதை பின்வரும் நபி மொழிகள் தெளிவுபடுத்துவதை காணலாம்.
“(என் தந்தை) உமர் (ரழி) அவர்களுக்கு ஆசியா (பாவி) எனப்படும் புதல்வி ஒருவர் இருந்தார் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜமீலா (அழகி) என மாற்றுப் பெயர் சூட்டினார்கள்.” அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) (ஆதாரம் முஸ்லிம் 4333)
மேலும் “(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர் மன்னாதி மன்னர் (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும். என்றார்கள் (ஆதாரம் முஸ்லிம் 4338)
எனவே பொருள் வித்தியாசப்படும் பெயர்களை மாற்றி வேறு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஏற்கனவே வைத்த பெயர் நல்ல பெயராக இருந்தாலும் அது தவறான கருத்துக்கு இடம்பாடு இருக்குமென்றால் அதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கலாம்.
“ஸைனப் (ரழி) அவர்களுக்கு முதலில் பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார். என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றம் உடைய நறுமண செடி) என்று பெயர் சூட்டினார்கள். (ஆதாரம் புகாரி: 6192, முஸ்லிம்: 4345)
அதே போல நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஜூவைரியா (ரழி) அவர்களுக்கு பர்ரா என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜூவைரியா (இளையவள்) என பெயர் மாற்றினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பர்ராவிடம் (நல்லவளிடம்) இருந்து புறப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதை நபியவர்கள் வெறுத்தார்கள். (ஆதாரம் முஸ்லிம்: 4334)
எனவே நல்ல பெயர்களாக இருந்தாலும் பொருள் வித்தியாசப்படும் என்று சொன்னால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பெயர் சூட்டல்:
குழந்தை பிறந்து விட்டால் யாரால் பெயர் சூட்ட வேண்டும்.? என்பதை தொடர்ந்து அவதானிப்போம். குழந்தையை பெற்றவர்களே குழந்தைக்கு பெயர் சூட்டலாம், அல்லது தான் விரும்பும் ஒருவரின் மூலம் பெயரை சூட்டலாம். என்பதை பின் வரும் குர்ஆன் வசனத்திலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நாம் விளங்கலாம்.
மர்யம் (அலை) அவர்களின் தாய் குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டு, அவர்களே பெயர் சூட்டினார்கள் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது. “… நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன்…(3- 36) பெற்றெடுத்த தாயே தாராளமாக குழந்தைக்கு பெயரை சூட்டலாம் என்பதை விளங்கிக் கொண்டீர்கள். அதே போல தான் விரும்பும் ஒருவரின் மூலமும் குழந்தைக்கு பெயரை சூட்டலாம் என்பதை பின் வரும் ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது.
”உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அவரது கணவர் அபூ தல்ஹா (ரலி) மூலம் தான் பெற்றெடுத்த குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்ற போது நபி (ஸல்) அவர்கள் பேரீத்தப் பழத்தை தன் வாயில் மென்று குழந்தையின் நாவில் சுவைக்க வைத்து விட்டு “அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள். ஆதாரம் புகாரி 5470 முஸ்லிம் 4341
அதே போல எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக் குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்து சென்றேன் நபி (ஸல்) அவர்கள் அக் குழந்தைக்கு இப்றாகீம் என பெயரிட்டார்கள்.பேரீத்தப் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவினார்கள். புகாரி 5467, முஸ்லிம் 4342
மேலும் அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து (ஹிஜ்ரத்) மதீனாவிற்கு செல்லும் வழியில் குபாவில் வைத்து தன் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அக்குழந்தையை நபியவர்களிடம் எடுத்தச் சென்ற போது பேரீத்தப் பழத்தை வாயில் மென்று அக்குழந்தையின் வாயில் வைத்தார்கள், பிறகு அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என பெயரிட்டு, அக் குழந்தைக்காக பிராத்தனை செய்தார்கள். புகாரி 5469, முஸ்லிம் 4343
இப்படி பல ஹதீஸ்களை காணலாம்.எனவே குழந்தைக்கு பெற்றேடுத்த தாயும் பெயர் வைக்கலாம், அல்லது தான் விரும்பியவரிடம் எடுத்தச் சென்று அல்லது அழைத்து வந்து பெயரை சூட்டலாம் என்பதை விளங்கிக் கொள்வதோடு, பேரித்தம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் சுவைக்க கொடுத்து அக்குழந்தைக்காக பிராத்தனையும் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தையும் அகீகாவும்:
அகீகா என்றால் குழந்தைக்காக ஆட்டை அறுத்து குர்பான் கொடுப்பதாகும்.
“குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது.குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்”. திர்மிதி 1442.
குழந்தைப் பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும்,பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும். ஏழாம் நாள் அகீகா கொடுக்க வசதியில்லா விட்டால், பிறகு கொடுக்க தேவை இல்லை.
புதிநான்காவது நாள் அல்லது இருபத்தி ஏழாம் நாள், அல்லது எப்போது வசதி வருகிறதோ அப்போது கொடுக்கலாம் என்பது இஸ்லாத்தி;ன் அடிப்படையில் இல்லாததாகும். அப்படி கொடுப்பதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பதை விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே ஏழாம் நாள் வசதியிருந்தால் அகீகா கொடுப்பது, ஏழாம் நாள் அகீpகா கொடுப்பதற்கு வசதி இல்லை என்றால் அதன் பிறகு கொடுக்க தேவை இல்லை.
அகீகாhவிற்கு ஆடு தான் கொடுக்க வேண்டும். சிலர் மாடும் கொடுக்கலாம் என்று ஹதீஸிற்கு மாற்றமாக சொல்கிறார்கள், அகீகாவிற்காக நபியவர்கள் மாடு கொடுத்ததாக எந்த ஹதீஸீம் கிடையாது. நபியவர்களே அகீகா கொடுக்கும் படி வழி காட்டினார்கள், அதன் படி ஆட்டை அறுத்து அகீகா கொடுப்பதே நபி வழியாகும். மாட்டையோ, ஒட்டகத்தையோ, கோழியையோ, அல்லது வேறு எந்த பிராணியையும் அகீகா கொடுப்பது நபியவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் இரண்டு, மூன்று பிள்ளைகளுக்காக ஒன்றாக சேர்த்து மாட்டை கொடுக்கலாம் என்று கூறி அப்படி செய்கிறார்கள் இதுவும் நபிவழியில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலை முடி இறக்குதல்:
குழந்தை பிறந்து ஏழாம் நாளில் அக் குழந்தையின் தலை முடியை மழிக்க வேண்டும். அதே நேரம் அந்த முடியை நிறுத்து அந்த முடியின் எடைக்கு சரிக்கு சரி தங்கமோ, வெள்ளியோ, கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸ் பலகீpனமானது என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
அந்த ஹதீஸை கவனியுங்கள், ” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்பேரர்) ஹஸனுக்காக ஒரு ஆட்டை அறுத்து அகீகா கொடுத்தார்கள். மேலும் (தமபுதல்வி) பாதிமா (ரலி) அவர்களிடம் குழந்தையின் தலை முடியை மழித்து அந்த தலை முடியின் எடையளவுக்;கு வெள்ளியை தர்மம் செய் என்று கூறினார்கள். (திர்மிதி 1439) இந்த ஹதீஸில் அறிவிப்பாளராக வரக் கூடிய அபூ ஜஃபர் முஹம்மது பின் அலி பின் அல்ஹூஸைன் என்பவர் இடம் பெறுகிறார் இவர் அலி (ரலி) அவர்களை சந்திக்கவில்லை, என்பதை உறுதிப் படுத்தி, அந்த ஹதீஸ் முன்கத்திஉ ஏற்றுக் கொள்ளப் பட முடியாது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
எனவே மழிக்கப் பட்ட தலை முடிக்காக தங்கமோ, வெள்ளியோ,கொடுக்க அவசியம் கிடையாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தை காதில் பாங்கும், இகாமத்தும்:
குழந்தை பிறந்த உடன், அதன் காதில் முதல் சப்தமாக பாங்கு கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும், சொல்லப் படுகிறது. இது சம்பந்தமான ஹதீஸை முதலில் அவதானிப்போம்.
“பாதிமா (ரலி) அவர்கள் ஹஸன் பின் அலி (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு சொல்வதை நான் பார்த்தேன். ( திர்மிதி 1436)
இந்த ஹதீஸ் பலகீனமான ஹதீஸாகும்; என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறகிறார்கள். இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் உபைதில்லாஹ் என்பவர் பலகீனமானவர், எனறுற இவரை இமாம் புகாரி அவர்கள் உள்ளிட்டோர் நிராகரிகின்றனர்.
எனவே குழந்தை பிறந்த உடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்வது அவசியம் கிடையாது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் இதற்கு தப்பான ஒரு விளக்கம் சொல்லப் படுகிறது. அதாவது ஒரு மனிதன் மரணித்தப் பின் அவருக்கு தொழுகை நடாத்தும் போது அத் தொழுகையில் பாங்கும் இகாமத்தும் சொல்வது கிடையாது . அதனால் தான் குழந்தை பிறந்த உடன் பாங்கும், இகாமத்தும் சொல்லப்படுகிறது என்று தனது அறியாமையினால் கூறகிறார்கள். இது பிழையான செய்தியாகும்.பெருநாள் தொழுகைக்கும், மழை வேண்டி தொழுகைக்கும்,சந்திர, சூரிய கிரகண தொழுகைக்கும் பாங்கும் இகாமத்தும் கிடையாது? அப்படியானால் இவைகளுக்கு என்ன பதில் சொல்வது? நல்லது தானே என்று கூறி மார்கத்தில் இல்லாத ஒன்றை நாம் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந் அமலையும் அல்லாஹ் ஏற்றக் கொள்ள மாட்டான். அது மட்டும் அல்ல நபியவர்கள் காட்டித் தராத செயலை அமலாக செய்தால் மறுமையில் தண்டனை கிடைக்கும் என்பதை குர்ஆனும், ஹதீஸூம் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
குழந்தையும் நாற்பதும்:
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்காக சிலர் நாற்பதாம் நாளை தெரிவு செய்து ஒரு மௌலவியை அழைத்து பாதிஹா ஓதி பிராத்தனை செய்து பெயர் சூட்டும் விழா நடக்கிறது.
குழந்தை பிறந்து ஏழாம் நாளில் குழந்தைக்கு செய்ய வேண்டிய சகல விடயங்களையும் செய்து விட வேண்டும் என்று நபியவர்கள் தெளிவாக கூறியிருக்க, அதற்கு மாற்றமாக இப்படி ஒரு நாற்பதை ஏற்ப்படுத்துகிறார்கள் என்றால் அந்த நாற்பதுடைய உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கும் நாற்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மாறாக தாயுக்கும் நாற்பதுக்கும் சம்பந்தம் இருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து தொடராக உதிரப் போக்கு இருக்கும் அவரவர் உடலமைப்பை பொருத்து உதிரப் போக்கு நிற்கும் நாள் வித்தியாசப்படும். கூடியது நாற்பது நாளை தீர்மானித்துள்ளார்கள். யார், யாருக்கு எத்தனையாவது நாளில் உதிரப்போக்கு நிற்கிறதோ அன்றிலிருந்து குளித்த விட்டு சகல வணக்கங்களிலும் ஈடுபடலாம்.
இந்த நாற்பதைப் பொருத்த வரை என் மனைவி சுதத்மாகி விட்டாள், எல்லாரும் வாங்க சாப்பிட என்றால் என்னடா? சுத்தமானதிற்கு ஒரு சாப்பாடா? என்று முகம் சுளிப்பார்கள் என்பதற்காக தான், இந்த மௌலவிமார்கள் தந்திரமாக இப்படி ஒரு நாளை ஏற்பாடு செய்துள்ளார்கள். எதுக்கு பாதிஹா ஓத வேண்டும், எதற்கு பாதிஹா ஓதக்கூடாது என்ற அறிவுக்கூட இல்லாமல் இந்த மௌலவி மார்களே இந்த சபையில் கலந்து சாப்பிட்டு விட்டு வருகிறார்கள் என்றால்? மார்க்கம் தெரியாத பொது மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.?
நாற்பது நாளாக குழந்தையை பெயர் சொல்லி கூப்பிட்டு விட்டு, நாற்பது அன்று பெயர் வைக்கிறார்களாம்.? குழந்தை பிறந்த உடன் குழந்தைக்கு முதல், முதலாக பாங்கு சப்தம் தான் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் நாற்பது அன்று குழந்தை காதில் மௌலவி பாங்கு சொல்கிறார்.? மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்து மறுமையில் நஷ்டவாளியாக ஆகிவிடாதீர்கள்.
எனவே மேற்சொல்லப்பட்ட சகல விசயங்களையும் சரியாக விளங்கி நடைமுறைப்படுத்துவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

No comments:

Post a Comment