Wednesday, August 2, 2017

காயிதே மில்லத் தமிழரா?

தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். கண்ணியமானவர், எளிமையானவர், தேசபக்தி நிரம்பியவர், நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர் என்றால் அவர் காயிதே மில்லத் மட்டுமே. சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய நான்கிலும் இடம்பெற்றவர்.

காயிதே மில்லத் தமிழரா?
முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கியபோது அதன் முக்கியத்தலைவராக இருந்தவர் காயிதே மில்லத். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம் லிக்கையும் பிரித்துவிடுவது என்று முடிவானது. அப்போது இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக காயிதே மில்லத்தும் பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பெயர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்தரத்துக்குப் பிறகான முதல் பொதுத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு காயிதே மில்லத்துக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் நேரு. காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறினார். அவர்கள் சின்னத்தில் நின்றால் வெற்றி சர்வநிச்சயம். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுயமரியாதையுடன் இயங்கும்.  தனது தனித்தன்மையைக் காக்கும் என்று சொல்லிவிட்டார் காயிதே மில்லத். ஆனால் அவருக்குப் பிறகான தலைவர்கள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவதை வழக்கமாகவே மாற்றிவிட்டனர்.

முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைகள் விஷயத்தில் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்தல் அரசியல் நோக்கங்களைப் புறக்கணித்தும் இயங்கியவர் காயிதே மில்லத்.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்.  “ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேசினார் காயிதே மில்லத்.

அதேபோல தேவிகுளம் பீர்மேடு விவகாரத்திலும் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார் காயிதே மில்லத். அந்தப் பகுதிகளில் தமிழர்களே அதிகம். தமிழ் பேசுபவர்களே அதிகம். ஆகவே, அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டியது என்றார். இத்தனைக்கும் காயிதே மில்லத்துக்கு கேரளாவில் செல்வாக்கு மிக அதிகம். தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகப் பேசினால் அவருடைய செல்வாக்கு பன்மடங்கு உயரும். ஆனாலும் உண்மையின் பக்கம் நின்றார் காயிதே மில்லத். ஒருகட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றுவிட்டாலும்கூட காயிதே மில்லத்துக்கு கேரளாவில் இருந்த செல்வாக்கு மாறவில்லை. அதன் பிறகு நடந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார் காயிதே மில்லத். இதில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம், தேர்தல் பிரசாரத்துக்காக அவர் தனது தொகுதிப்பக்கமே செல்லவில்லை. காயிதே மில்லத்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குக்கு அந்த வெற்றிகள் சத்திய சாட்சிகள்.

காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்பாளராகவே காயிதே மில்லத் விளங்கினார். அதன் பொருளாதாரக் கொள்கைகளை, செயல்திட்டங்களில் இருக்கும் குளறுபடிகளைக் கடுமையாக விமரிசித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்க முனைந்தார். சுதந்தரா கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் போன்ற எதிரெதிர் துருவங்களில் செயல்படும் கட்சிகளை ஓரணியில் கொண்டுவரவேண்டும் என்ற அண்ணாவின் முயற்சிக்குப் பக்கபலமாக இருந்தார் காயிதே மில்லத். அவருடைய முயற்சியால் ஏழுகட்சிக் கூட்டணி உருவானது. அந்தத் தேர்தலில் வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரை தமிழ்நாட்டில் எழுந்திருக்கவே இல்லை.

காயிதே மில்லத் எப்படித் தமிழராகவும் தமிழ்ப்பற்றாளராகவும் விளங்கினாரோ அதைப்போலவே பரிபூரண இந்தியராகவும் விளங்கினார்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு  நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்றார் காயிதே மில்லத்.

காயிதே மில்லத்தின் மறைவுக்குப் பிறகு அவருடைய முஸ்லிம் லீக் மெல்ல மெல்ல பல பிரிவுகளைச் சந்தித்துவிட்டது. தமிழ்நாட்டிலேயே அந்தக் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றாலும் அது காயிதே மில்லத் காலத்தில் இருந்த அளவுக்கு வீரியத்துடன் இயங்கவில்லை. இந்த இடத்தில் முஸ்லிம் லீக் பற்றி காயிதே மில்லத் சொன்ன வாசகம் ஒன்றைச் சொல்வது பொருத்தம்.

“முஸ்லிம் லீக் என்றால் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குபலத்தால் இயங்கும் கட்சி என்ற நிலை ஏற்படவேண்டும். அப்படியானால்தான் சர்க்கார் நம்மை மதிக்கும், என்ன நடந்தாலும் சரி, முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிடக்கூடாது. ஒற்றுமையை விட்டுவிடக்கூடாது, உரிமைகளை விட்டுவிட்டால் நாம் பிற்காலத்தில் மக்களாக வாழமுடியாது". 
நன்றி : ஆர். முத்துக்குமார்எழுத்தாளர், http://ns7.tv/ta/, June 05, 2017

No comments:

Post a Comment