Tuesday, November 26, 2019

பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தொழுகைக்கான அழைப்புக்கு பாங்கு என்று சொல்லப்படும். நீங்கள் காலை வேளையில் பள்ளிவாசல்களில் இருந்து இந்த அழைப்பு விடப்படும்போது சுற்றிலும் உள்ள நாய்களும் கூடவே ஊளையிட்டுக் கதற ஆரம்பிப்பதைக் கண்டிருப்பீர்கள். இது ஏன்?
தொழுகைக்கான பாங்கு சப்தம் எழும்போது அங்கு என்ன நடக்கிறது...
நாம் கண்ணால் காணாத பலவிடயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன என்பதை இறைவனின் தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளில் இருந்து அறிகிறோம். இதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான்.
தொழுகைக்கு ‘இகாமத்’ (தொழுகைக்கு அணிவகுத்து நின்றதும் விடப்படும் மறு அழைப்பு) கூறும் போதும் ஓடுகிறான்.இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, “இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,“ என்று சொல்லிக் கொண்டு இருப்பான்.தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள்(சுற்றுக்கள்) தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.“ என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
(நூல்: புகாரி 608)

ஆக ஷைத்தான் என்னும் நம் கண்களுக்குப் புலப்படாத ஜீவராசி பாங்கு கொடுக்கப்படும் சத்தத்தைக் கேட்டதும் அங்கிருந்து ஓட்டமெடுக்கிறான் என்பதை அறிகிறோம். சரி, அதற்கும் நாய் ஊளையிடுவதற்கும் என்ன தொடர்பு? அதையும் மற்றொரு நபிமொழியில் இருந்தே அறிகிறோம்....
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இரவு நிசப்தமாக அமைதியுறும்போது வீட்டை விட்டு வெளியில் செ ல்வதைத் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் படைத்த பல ஜீவராசிகளை பரவவிடுகிறான். யாராவது நாய் குரைப்பதையோ கழுதை கத்துவதையோ கேட்க நேரிட்டால் அவர் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளட்டும், காரணம் நீங்கள் பார்க்காத ஒன்றை அவை பார்க்கின்றன.”
(அறிவிப்பவர்: ஜாபிர் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத், ஹாகிம், அபுதாவுது)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது. கழுதை சப்தத்தைக் கேட்டால் ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5275)

இவ்வாறு ஷைத்தான் வெருண்டோடுவதை நாய்கள் காண்பதால்தான் அவை குரைக்கவும் ஊளையிடவும் செய்கின்றன என்பதை மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து அறியலாம். அப்படியென்றால் மற்ற தொழுகை வேளைகளில் இது நடைபெறுவதில்லையா? ... இந்த சந்தேகம் எழுவது இயல்பே. காலை வேளைகளில் ஊரடங்கி இருப்பதாலும் நாய்கள் தெளிவாக ஷைத்தானை கவனிக்கும் வாய்ப்புகள் அதிகம். நாமும் நாய்கள் சப்தமிடுவதை தெளிவாகக் கேட்கவும் முடிகிறது. மற்ற வேளைகளில் இது குறைவு. இறைவனே மிக அறிந்தவன்.
இந்த விளக்கம் நபிமொழிகள் என்பவை இறைவன் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளே என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தகவல் : இறைவனின் வஹி
 பெறுநர் 
மறுமைநோக்கிஓருபயணம்

No comments:

Post a Comment