Friday, December 12, 2014

மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் காமராஜர்

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்தார் காமராசர்.
தமக்கே உரிய சீரிய பாணியில் பேசினார். ஒவ்வொரு ஊர்ப் பொதுமக்களும் ஆங்காங்கே உள்ள பள்ளிகளைத் தங்கள் உதவியால், முயற்சியால் சீரமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
போதிய வசதிகள் உள்ள பள்ளிகளிலேயே தரமான படிப்பை எதிர்பார்க்க முடியுமென்பதைச் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து உரையாடிய முதல்-அமைச்சர், `ஏழைப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படித்தால் தான் உண்டு. அவர்களுக்கு வீட்டில் பாடஞ் சொல்லிக் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அவர்கள் பெற்றோர்களுக்கோ எழுதப் படிக்கக் கூடத் தெரியாது.
ஆகவே, ஏழை மாணவ-மாணவிகள் உதவியின்றித் தவிக்கிறார்கள்.மாறாக, பணக்காரப் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஓர் ஆசிரியரை அமர்த்தி, டியூஷன் சொல்லிக் கொடுப்பார்கள்.
`ஏழைகளுக்கு அவ்வாறு செய்து கொள்ள முடியாதே. அத்தகையோருக்கு பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியர்களே கூடுதலாகப் பாடம் கற்றுக் கொடுக்க, ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் திட்டம் வகுக்கும்படி கல்வி இயக்குனரைக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
அவருக்குப் பின்னால் கல்வி இயக்குனர் நெ.சுந்தரவடிவேல் பேசினார். மேற்படி யோசனையைக் குறிப்பிட்டு, `பகல் உணவுத் திட்டத்தைத் தொடங்கினோம். அது பாதியில் இருக்கிறது. இன்னும் எத்தனையோ பள்ளிகளில் அதைச் செயல்படுத்த வேண்டியிருக்கிறது.
அடுத்த முயற்சி பள்ளிச் சீரமைப்பு இயக்கம். அது இப்போதுதான் முளைத்திருக்கிறது.
இந்த இரு பெரும் பணிகளையும், பொறுப்புகளையும் ஆசிரியர்களே தாங்குகிறார்கள்.
மேற்பார்வைப் படிப்பு முறையையும் செயல்படுத்த
வேண்டியவர்கள் அவர்களே. சட்டென்று பல சுமைகளைப் போட்டால் தாங்க மாட்டார்கள். ஆகவே, பகல் உணவுத் திட்டமும் பள்ளிச் சீரமைப்பு இயக்கமும் அநேகமாக எல்லா பள்ளிகளுக்கும் பரவிய பிறகு, `மேற்பார்வைப்
படிப்பைக்' குறித்துச் சிந்திக்கிறோம். சற்று பொறுத்துக் கொள்ளமாறு, முதல் அமைச்சரை வேண்டுகிறேன்' என்று முடித்தார்.கல்வி இயக்குர் சொன்னதே சரி. எடுத்ததை முடித்த பிறகே, அடுத்ததைத் தொடங்கட்டும்.
நல்ல கருத்தைத் தோன்றியதும் சொல்லி விட்டேன். அவ்வளவே ஆசிரியர்களும் இயக்குனரும் கலந்து ஆலோசித்து எப்போது தொடங்கலாம் என்பதை முடிவு செய்யட்டும் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார். இப்படி மற்றவர்கள் கருத்துக்கு அவர் மதிப்பு கொடுத்தார்.'

No comments:

Post a Comment