Sunday, December 14, 2014

தயிர் இயற்கையின் அரு மருந்து.

தயிர் இயற்கையின் அரு மருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரனமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ளும் முக்கிய காரணம், அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி தான்.
ஆனால் பால் செரிக்க நேரம் எடுக்கும். ஆனால் தயிர் பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதத்தை பெற்றுள்ளதுடன் மிக விரைவாக செரித்து விடும். பால் ஒரு மணி நேரத்தில் 32%பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணமாகிவிடும்.
தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயந்து தயிரை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றனர். உண்மையில், தயிரை அளவோடு எடுத்துக் கொண்டால் உடல் எடையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது. முற்காலங்களில், பசுந்தயிர் உற்பத்தி செய்யப்பட்டது. பாலில் இருந்து நொதிக்க வைக்கப்பட்டு தயிர் விற்பனைக்கு வரப்பட்டது.
இன்று இதன் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது. தயிர் பாக்கெட்டுகள் தான் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த தயிர் பாக்கெட்டுகளில், புரதத்தை தனியாக உறுஞ்சிவிட்டு குறைந்த புரதத்துடன் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. முழு புரோட்டீனுடன் உள்ள புரோடீன் ரிச் தயிர் பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன.
எனவே, தயிர் பாக்கெட்டுகள் வாங்கும் போது புரோட்டீன் ரிச் தயிர் என்றோ அல்லது பின்னால் உள்ள ஊட்டச்சத்து பட்டியலில் புரோட்டீன் 15-18 கிராம் வரை உள்ள தயிரையோ தேர்வு செய்யுங்கள். அடுத்தது தயிருடன் எடுத்துக் கொள்ளும் சைட் டிஷ். பொதுவாகவே தயிர் சாப்பிடும் போது கொழுப்பு அதிகமான சைட்டிஷான உருளைக்கிழங்கு வருவல் அல்லது சிப்ஸ், வேர்கடலை, ஊறுகாய் போன்றவற்றை தான் நாம் எடுத்துக் கொள்கிறோம்.
இவற்றை தவிற்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். வீட்டில் தோய்க்கும் தயிரைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இவை நான் தயிர் தோயக்க பயன்படுத்தும் பாலைப் பொருத்து புரதத்தையும் கொழுப்பையும் பெற்று இருக்கும். இதில் கவணிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம், தயிரை நன்கு தோய விட வேண்டும். சரியாக தோயாத தயிரை உட்கொள்ளுதல் செரிமாணப் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
தயிர் குறித்த மேலும் சில குறிப்புகள் கீழே:
* தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
* மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

No comments:

Post a Comment