Friday, January 16, 2015

எழுபது பெரிய பாவங்கள்

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
…எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ) 

2. கொலை
~~~~~~~~~~~~
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)

ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
3. சூனியம்
~~~~~~~~~~
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
4. தொழுகையை வீணாக்கி விடுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷதங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)

மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)
6. நோன்பை விடுதல்
~~~~~~~~~~~~~~~~~
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)

எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
7. ஹஜ்ஜு செய்யாமை
~~~~~~~~~~~~~~~~~~
…..எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்… (3:97)

8. பெற்றோரைத் துன்புறுத்துதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~`
…… (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
9. உறவினர்களை வெறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
10. விபச்சாரம்
~~~~~~~~~~~~
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)

கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
11. ஆண் புணர்ச்சி
~~~~~~~~~~~~~~~
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
12. வட்டி
~~~~~~~~~~~
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)

வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)

அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்… (6:152)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்… (39:60)

பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
_______________________________________________
….உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)

16. தலைவன் அநீதி செய்தல்
__________________________
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)

எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
17. பெருமை
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
18. பொய்ச்சாட்சி கூறல்
______________________
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)

19. மது அருந்துதல்
_________________
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)

அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
20. சூது
________
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
__________________________________________
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)

22. மோசடி செய்தல்
___________________
”மோசம்” செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்… (3:161)

23. களவு
___________
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)

24. வழிப்பறி
_____________
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)

25. பொய்ச் சத்தியம்
___________________
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்

1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
26. அநீதி இழைத்தல்
___________________
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

27. கப்பம் பெறல்
_______________
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

28. தகாத உணவு
________________
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)

அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
29. தற்கொலை
_________________
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

30. பொய்
__________________
… யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)

மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
31. கெட்ட நீதிபதி
__________________
… எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)

32. அதிகாரியின் இலஞ்சம்
__________________________
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
_____________________________________
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

34. கூட்டிக் கொடுத்தல்
________________________
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)

35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
______________________________________
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)

37. முகஸ்துதி
______________
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)

38. கற்ற கல்வியை மறைத்தல்
_____________________________
‘அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்’, பாமரமக்களிடம் ‘அறிவாளி’ எனப் பெயர் எடுப்பதற்கும், ‘மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை’ அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

39. சதி செய்தல்
_______________
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
__________________________________________
”சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்” சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)

41. விதியைப் பொய்ப்படுத்துதல்
______________________________
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

42. மற்றவர்களின் இரகசியம்
___________________________
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள். நான் திரும்பி வரும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதையில் ஓரிடத்தில் அமர்ந்து என்னை எதிர்ப்பார்த்தார்கள். நான் என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சற்று தாமதித்து விட்டேன். அப்போது அன்னையவர்கள் எங்கு சென்றாய்? என விசாரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியுள்ளார்கள் எனக் கூறினேன்.

அது என்ன? என என் தாயார் வினவினார்கள்.
உடனே நான் அது இரகசியம். (சொல்ல மாட்டேன்) என்றேன். அப்போது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்; ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரகசியத்தைப் பேணிக் கொள் (சொல்ல வேண்டாம்) எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திரிமிதீ)

43. கோளுரைத்தல்
_________________
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)

44. திட்டுதல் (சபித்தல்)
____________________
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)

45. வாக்கு மாறுதல்
___________________
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
____________________________________
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

47. கணவனுக்கு மாறு செய்தல்
_____________________________
… எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)

48. உருவப் படம் வரைதல்
_________________________
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

49. ஒப்பாரி வைத்து அழுதல்
__________________________
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

50. கொடுமை செய்தல்
_____________________
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

51. வரம்பு மீறுதல்
_________________
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)

52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்
__________________________________
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)
53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
_________________________________
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

54. துறவிகளைத் துன்புறுத்துதல்
______________________________
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

55. மமதையும், தற்பெருமையும்
_________________________________
…பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
____________________________________
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
57. அடிமை ஒளிந்தோடல்
_________________________
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.

58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)
__________________________________________
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
_________________________________
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

60. மேலதிக நீரைத்தடுத்தல்
___________________________
‘மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது’ என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,

61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
_________________________________________
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)

62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
_________________________________________
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
__________________________________________
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)

64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
__________________________________________
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் ”யுத்தப் பிரகடனம்” செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

65. தனித்துத் தொழுதல்
______________________
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

66. ஜும்ஆவைத் தவற விடல்
________________________________
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) ”அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்” என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
_________________________________________
…(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)

68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
_______________________________
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)

69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
________________________________________
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.

70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
________________________________
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)

நன்றி : http://chittarkottai.com

No comments:

Post a Comment