Thursday, February 5, 2015

‪சுவனம் நமது வீடுகளில்‬...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த ஒரு முஃமினான கணவனும் தன் மனைவியைக் கோபப்பட்டு பிரிந்து விட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால் இன்னொரு குணம் திருப்தியுறச் செய்யும்." அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)      நூல்: முஸ்லிம்
கணவனும் மனைவியும் முதலில் கற்க வேண்டிய பாடம் " விட்டுக்கொடுத்தலும், அன்பும்தான்." வீட்டை சுவனமாக மாற்ற இன்னொரு திறவுகோலும் அதுதான். ஒரு குடும்பத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கும் போதும், தான் வைத்ததே சட்டம் நான் சொன்னதே சரி! என்றால் குடும்பத்தில் எப்படி அன்பை பெற முடியும்.
குர்ஆன் எங்கல்லாம் குடும்பங்கள்பற்றி பேசப்படுகிறதோ அஙகெல்லாம் அன்பும், அருளும் பொதிந்த வார்த்தைகளை நாம் கவனிக்கலாம் கணவன் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது....
"மேலும் உங்களிடையே அன்பையும், கருணையும் தோற்றுவித்தான்."
( அல்குர்ஆன்: 30:21 )
மனிதர்கள் எல்லோரிடமும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. குறையில்லாத மனிதர்கள் யார்...? ஒரு மனிதன் பிடிவாத குணத்துடன் இருக்கும் போதுதான் தன்
நெருங்கிய குடும்ப பந்தத்தை உடைக்கிறான். அதன் விளைவு கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பேசாமல் இருப்பவர்கள், தன்னையே தண்டிப்பவர்கள், வீட்டை விட்டு செல்பவர்கள், அழுது அழுது அல்லாஹ்விடம் முறையிடுபவர்கள். தனக்குத் தானே மனநோய் பிடித்தவர்களைப் போல பேசுபவர்கள் ஏராளம்!
குடும்பத்தில் சினன சின்ன விஷயங்களில் கூட கணவன் - மனைவி பரஸ்பரம் ஆலோசனை செய்யும் படி குர்ஆன் கூறுகிறது. எந்த அளவுக்கு எனில் குழந்தையின் பால்குடி விஷயத்தில் கூட பரஸ்பர ஆலோசனையை வலியுறுத்துகிறது.
"ஆயினும் அவர்களிருவரும் ( தாயும். தந்தையும் ) ஒருவருக்கொருவர் பரஸ்பர மனநிறைவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் பால்குடிப்பழக்கத்தை நிறுத்தி விடக் கருதினால் ( அவ்வாறு செய்வதில் )
அவ்விருவர் மீதும் குற்றமில்லை."
( அல்குர்ஆன் :2:233 )
ஒரு சாதாரண பால்குடி விஷயத்தில்கூட கணவனும் மனைவியும் ஆலோசனை செய்ய வேண்டும் என்றால் மற்ற விஷயங்கள்.......?
பிள்ளைகளின் எதிர்காலம், பள்ளிப்பருவம். ஓழுக்க மாண்புகள், கல்லூரி, திருமணம் என்று நிச்சயம் ஆலோசனை செய்ய வேண்டும் என்பது குர்ஆனின் விண்ணப்பமாக இருக்கும். நபித்தோழர்கள் காலத்தில் ஒருவர் தன் மனைவியின் மேல் கோபப்பட்டு அவளை விவகாரத்து செய்ய உமர்(ரலி) அவர்களிடம் கோபமாக வருகிறார். வீட்டிலிருந்து உமர்(ரலி) அவர்களுடைய மனைவியின் சப்தம் கேட்கிறது
உமர்(ரலி) சப்தத்தை காணவில்லை. நம் வீடே பரவாயில்லை என்று வந்தவர் திரும்பிச் செல்ல முற்பட..... உமர்(ரலி) அவர்கள் விஷயத்தை கேள்விப்பட்டு வந்தவரிடம் இவ்வாறு கூறினார்:
"என் மனைவி என் ஆடைகளை துவைக்கிறாள். அது அவள் மீது கடமையில்லை, என் குழந்தைகளைக் கவனிக்கிறாள் அது அவள் மீது கடமையில்லை. எனக்கு உணவு சமைத்து தருகிறாள், அது அவள் மீது கடமையில்லை, இவற்றையெல்லாம் கடமையில்லாமல் அவள் செய்யும் பொழுது அவள் உயர்த்தும் சப்தத்தை நான் பொறுத்துக் கொள்ளக் கூடாதா...? அன்பு சகோதரரே.... வீடு என்பது அன்பினால் தானே கட்டப்படுகிறது....! என்று கூறினார். ( அல்லாஹு அக்பர்)
மனித குலம் எப்படி தோன்றியது.?
ஒர் ஆதம் ஹவ்வாதானே....! மலக்குகள் மற்றும் ஜின்கள் போன்ற எண்ணிலடங்காமல் படைத்து மனிதனில் மட்டும் ஏன் அல்லாஹ் ஒன்றை படைத்தான்..? ஒரே நேரத்தில் பல லட்சம் மனிதர்களை படைத்திருக்கலாமே...? ஏனெனில் ஒட்டு மொத்த மனித குலமும் ஒரே ஒரு குடும்பத்திலிருந்து உருவாக வேண்டும் என்பதற்காகவே. அது மட்டுமல்ல......
ஆதம் ( அலை ) பூமியில் இறங்கும் முன் "ஸிலத்துர் ரஹ்ம்" எனும் குடும்ப உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக்கொண்டு இவ்வாறு கேட்டது:
"யா அல்லாஹ்! என்னை பாதுகாக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன், "அல்லாஹ் கூறினான்:
உன்னை சேர்ந்து வாழ்பவர்களுடன் நானும் சேர்ந்திருப்பேன். உன்னை துண்டித்து விடுபவர்களை நானும் துண்டித்து விடுவேன்."
( நூல்: புகாரி, முஸ்லிம் )
நாம் மாறுவோம்....     நம் வீடுகளை சுவனமாக மாற்றுவோம்

No comments:

Post a Comment