Wednesday, March 22, 2017

“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
“இறைமறுப்பாளர்களைக் கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது” என்று முஸ்லிமல்லாத சில அறிவுஜீவிகளுக்காக இந்த வரலாறு.
நபிகளாரின் காலத்தில் உஹதுப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம்.
முஸ்லிம் படையில் சிறந்த வீரரும் நபிகளாரின் நெருங்கிய உறவினருமான ஹம்ஸா(ரலி) அவர்களை எப்படியாவது வெட்டிச் சாய்த்துவிட வேண்டும் என்று இறைமறுப்பாளர்களின் தலைவர்கள் வஹ்ஷி எனும் கறுப்பர் இன அடிமை ஒருவரை நியமிக்கின்றனர்.

இந்த வஹ்ஷி வாட்டசாட்டமான ஆள். கடைந்தெடுத்த இறைமறுப்பாளர். இஸ்லாத்தை அடியோடு வெறுப்பவர். குறிபார்த்து ஈட்டி எறிவதில் வல்லவர். ஹம்ஸாவைக் கொன்றுவிட்டால் ஏராளமான பரிசுகள் தரப்படும் என்று வஹ்ஷிக்கு இறைமறுப்பாளர்கள் ஆசை காட்டியிருந்தனர்.
தன் ஈட்டிக்கு நேராக ஹம்ஸா வரும்வரை காத்திருந்தான் வஹ்ஷி.
வந்தது வாய்ப்பு...ஒரே வீச்சு.... ஹம்ஸாவின் திருமேனியில் ஈட்டி பாய்ந்தது...ஹம்ஸா வீரமரணம் அடைந்தார். அவருடைய கை, கால், கண், மூக்கு எல்லாமே சிதைக்கப்பட்டன. வயிற்றைக் கிழித்து உள்ளுறுப்புகள் வெளியே இழுக்கப்பட்டன.
ஹம்ஸா வீழ்ந்தாலும்கூட போரில் முஸ்லிம்கள்தான் வெற்றி பெற்றனர்.
பின்னர் ஒரு சமயத்தில் இறைமறுப்பாளன் வஹ்ஷி நபிகளார் முன் நிறுத்தப்பட்டான்.
நபிகளார் அப்போது மாபெரும் ஆட்சியாளர். ஒரே ஒரு சமிக்ஞை போதும்- வஹ்ஷியின் தலை உருண்டிருக்கும்.
ஆனால் அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வஹ்ஷியை- அந்தக் கொடூர இறைமறுப்பாளனை மன்னித்து விடுதலை அளித்து விட்டார்.
இதுதான் இஸ்லாமிய வரலாறு.
-சிராஜுல்ஹஸன்

No comments:

Post a Comment